பெங்களூரில் "கோழி கறி குழம்பு" தகராறு.. தமிழக லாரி டிரைவர் படுகொலை- 5 ம.பி. தொழிலாளர்கள் கைது!
பெங்களூர்: கோழிக் கறி குழம்பு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷை படுகொலை செய்ததாக மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் தமிழக லாரி டிரைவர் சுரேஷுடன் இணைந்து பணியாற்றிய போது ஏற்பட்ட கோழி கறி குழம்பு தகராறுதான் இந்த படுகொலைக்கு காரணம் என பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா பகுதியில் ஏசிஎஸ் லே அவுட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்கான லாரியை தமிழ்நாட்டில் இருந்து டிரைவர் சுரேஷ் ஓட்டி வந்தார். அவருடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவி மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 5 தொழிலாளர்களும் பெங்களூர் வந்தடைந்தனர்.

பெங்களூரில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த பணி முடிவடைந்த பின்னர் அனைவரும் அதே இடத்திலேயே சமைத்து சாப்பிட்டு விட்டு தங்கி உள்ளனர். அப்போது, ம.பி.யைச் சேர்ந்த பாபு என்பவர் அனைவருக்கும் கோழி கறி குழம்பு சமைத்துள்ளார். ஆனால் சாப்பிடும்போது பாபு வைத்த கோழி கறி குழம்பு நன்றாகவே இல்லை என கூறி தமிழக டிரைவர் சுரேஷ் ஆத்திரப்பட்டுள்ளார். இதில் தமிழக டிரைவர் சுரேஷுக்கும் ம.பி. மாநில தொழிலாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொருவரான ரவி காலையில் எழுந்து பார்த்த போது, டிரைவர் சுரேஷ் மிகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்ததால் அதிர்ச்சியில் உறைந்து போனார். இது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் டிரைவர் சுரேஷின் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் டிரைவர் சுரேஷை படுகொலை செய்ததாக மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 5 தொழிலாளர்களையும் பெங்களூர் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு லாரி ஓட்டுநர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications