மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த கார்.. சென்னையில் இருந்து சென்ற 4 பேர் பலி.. கோர விபத்து
பெங்களூர்: சென்னையில் இருந்து 4 பேர் பெங்களூருவுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அதிகாலையில் கோலார் மாவட்டத்தில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது தடுப்பு சுவரில் மோதி அவர்களின் கார் கீழே விழுந்தது. இதில் 4 பேர் பலியாகினர்.
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் காரிடாரில் நேற்று அதிகாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது.

அந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்து நொறுங்கியது. இதில் காரில் பயணித்த 4 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்கள். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கோலாரில் உள்ள ஆர்எல் ஜாலப்பா மருத்துவமனையில் 4 பேரும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி 4 பேரும் பரிதாபமாக இறந்தனர். விசாரணையில் இறந்தவர்களின் பெயர்கள் ஹரிஹரன் (வயது 27), கோி(38), கவுதம் ரமேஷ் (28), ஜெயசங்கர் (30) என்பது தெரியவந்தது.
இவர்கள் 4 பேரும் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றினர். சென்னை வந்துவிட்டு நேற்று காலையில் மீண்டும் பணிக்காக பெங்களூர் சென்றபோது விபத்தில் சிக்கி உள்ளனர். அதாவது ஐயப்பா சாமிக்கு மாலை அணிந்திருந்த ஹரிஹரன் காரை ஓட்டினார். மாலூர் அருகே மேம்பாலத்தில் அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்து விபத்தில் சிக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி மாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications