அவர் எளிய மனிதர்.. உருகிய எடியூரப்பா.. உடைந்து அழுத குமாரசாமி.. சித்தார்த்தா உடலுக்கு அஞ்சலி!
காபி டே நிறுவனர் சித்தார்த்தா உடலுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
Recommended Video
பெங்களூர்: காபி டே நிறுவனர் சித்தார்த்தா உடலுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று மாலை 6.30 மணிக்கு அவரின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்தியாவின் தனிப்பெரும் காபி ஷாப் நிறுவனமாக காபி டே வளர்ந்து நிற்கிறது. இதன் அசுர வளர்ச்சிக்கு காரணமான அதன் நிறுவனர் சித்தார்த்தா நேற்று முதல்நாள் தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று முதல்நாள் மாலை காபி டே நிறுவனர் சித்தார்த்தா திடீரென்று மாயமானது நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று முழுக்க மங்களூர் அருகே நேத்ராவாதி ஆற்றில் அவர் தேடப்பட்டு வந்தார்.
என்ன உடல்
இந்த நிலையில் இன்று அதிகாலை அவரின் உடல் மீனவர்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அரபிக்கடலில் மீன்பிடித்து திரும்பிய மீனவர்கள் நேத்ராவதி நதி அருகே அவரின் உடலை கண்டுபிடித்தனர். சித்தார்த்தா மரணத்திற்கு பொருளாதார பிரச்சனைதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் ஒப்படைப்பு
இந்த நிலையில் சித்தார்த்தாவின் உடல் மங்களூரில் இருக்கும் வென்லாக் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரின் உடல் மொத்தம் 2 மணி நேரம் அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது அவரின் உடல் அஞ்சலிக்காக சிக்மங்களூரில் உள்ள அவரின் எஸ்டேட்டில் வைக்கப்பட்டுள்ளது.
குமாரசாமி அஞ்சலி
சித்தார்த்தாவின் உடலுக்கு அருகிலேயே அவரின் மாமனார் முன்னாள் அமைச்சர் எஸ்எம் கிருஷ்ணா அமர்ந்து இருந்தார். இந்த நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் மஜத மாநில தலைவர் குமாரசாமி அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்தும் போதே தன்னையும் அறியாமல் குமாரசாமி உடைந்து அழுதார்.
எடியூரப்பா அஞ்சலி
சித்தார்த்தா உடலுக்கு அஞ்சலி செலுத்திய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, சித்தார்த்தா மிகவும் எளிமையான மனிதர். இந்திய காபி துறையில் அவர் புதிய சாதனையை படைத்தார். எஸ்எம் கிருஷ்ணா போன்ற தலைவரின் ஆதரவு இருக்கும் நேரத்தில் அவர் ஏன் இப்படி தவறான முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை என்று, கூறியுள்ளார்.
இன்று மாலை
தற்போது தலைவர்களை அடுத்து முக்கிய தொழில் அதிபர்கள், காபி டேவின் முக்கிய ஊழியர்கள் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று மாலை 6.30 மணிக்கு அவரின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.