வழிந்தோடும் கேஆர்எஸ் அணை! கபினியை கேட்கவே வேண்டாம்! தமிழகத்திற்கு நான்-ஸ்டாப்பாக வரும் காவிரி
பெங்களூரு: கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 47,000 கன அடிக்கும் மேல் நீர் திறக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழையின் தீவிரம் காரணமாக கேரளா, தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி, அணைகள் மற்றும் ஆறுகளுக்கு நீர் திறக்கப்பட்டு வருகின்றன.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு (கே.ஆர்.எஸ்.) நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை 30ஆம் தேதியே கே.ஆர்.எஸ். அணை நிரம்பியதையடுத்து, மைசூரு மற்றும் மண்டியா மாவட்ட விவசாயப் பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டது.
நேற்று (ஜூலை 5) மாலை 7 மணி நிலவரப்படி, 124.80 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 123.70 அடியாக உள்ளது. மைசூரு மாவட்டம் எச்.டி. கோட்டையில் உள்ள 19.52 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் தற்போதைய கொள்ளளவு 17.05 டிஎம்சியாக உள்ளது. இந்த அணையிலிருந்து வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு மொத்தமாக வினாடிக்கு 47,590 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications