"சந்தேகமே வேண்டாம்.." கர்நாடக தேர்தலில் காங். வென்றால் யார் முதல்வர்! ஓப்பனாக சொன்ன சித்தராமையா
பெங்களூர்: கர்நாடகாவில் மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில், இது குறித்து சித்தராமையா முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
கர்நாடகாவில் ஏற்கனவே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. அங்கே வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட்டு, மே 13ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
அங்கே இப்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சியில் இருக்கிறது. தென் இந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் என்பதால் அவர்கள் எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்க நினைக்கிறார்கள்.

கர்நாடகா தேர்தல்
ஆனால், இதுவரை வெளியான தேர்தல் கருத்துக்கணிப்புகள் அதற்கு நேர்மாறாக இருக்கிறது. இதுவரை வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகளிலும் பாஜகவுக்கு தோல்வி என்றே கூறப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. அதேநேரம் காங்கிரஸில் முதல்வராக யார் இருப்பார் என்பதில் குழப்பமும் நிலவுகிறது. இதற்கிடையே கர்நாடகாவில் முதல்வர் ரேசில் தானும் இருப்பதாக சித்தராமையா உறுதிப்படத் தெரிவித்தார்.

சித்தராமையா
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் முதல்வர் ரேஸ், காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார் உடன் இருக்கும் உறவு, தேர்தலில் காங்கிரஸின் திட்டம் ஆகியவை குறித்து சித்தராமையா விரிவாகப் பேசினார். இது குறித்து அவர் பேசுகையில், "முதல்வர் ரேசில் 100% நான் இருக்கிறேன். இப்போதிருக்கும் சூழலில் நானும், டி.கே. சிவகுமாரும் முதல்வர் ரேசில் இருக்கிறோம். வேறு யாரெல்லாம் முதல்வர் ஆசையில் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. கடந்த காலங்களில் யாரும் முதல்வர் பதவிக்கு விரும்புவதாகவும் தங்கள் ஆசையை வெளிப்படுத்தியதில்லை.

முதல்வர் வேட்பாளர்
கர்நாடகாவில் காங்கிரஸ் முற்றிலும் ஒன்றுபட்டுள்ளது. டிகே சிவக்குமாரும் முதல்வராக விரும்புகிறார். அதில் தவறு ஏதும் இல்லை. இறுதியில், வெல்லும் எம்.எல்.ஏ.க்கள்தான் சேர்ந்து முதல்வரை முடிவு செய்வார்கள்" என்றார். சித்தராமையாவை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் கர்நாடகாவில் பாஜக மிகப் பெரிய அளவில் வெல்லும் என்று சிலர் கூறுவது குறித்த கேள்விக்கு அவர், "காங்கிரஸ் ஒருபோதும் முதல்வர் வேட்பாளர் அறிவித்துத் தேர்தலை எதிர்கொண்டது இல்லை. இந்த விவகாரத்தை எல்லாம் தலைமையின் முடிவிற்கு விட்டுவிடுவோம்" என்று அவர் தெரிவித்தார்.

கர்நாடகா
2018 தேர்தல் சமயத்திலேயே பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் அவர்களுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து ஜேடிஎஸ் காங்கிரஸ் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்து ஆட்சி செய்தது. இருப்பினும், இந்த ஆட்சி சில காலம் மட்டுமே நீடித்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலரும் பாஜகவில் ஐக்கியமானதால், 201 ஜூலை மாதம் பாஜக ஆட்சியை அமைத்தது. அப்போது எடியூரப்பா முதல்வரானார். இருப்பினும், அதன் பிறகு எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, பசவராஜ் பொம்மை முதல்வராக்கப்பட்டார்.

பாஜக
இறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நம்பிக்கை தெரிவித்தார். இருப்பினும், வரும் கருத்துக்கணிப்புகள் அவர்களுக்குச் சாதகமாக இல்லை. அதேபோல கடந்த முறை பாஜக, காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெறுவதை ஜேடிஎஸ் தான் தடுத்து நிறுத்தியது. ஆனால், இந்த முறை பழைய மைசூர் பிராந்தியத்தில் உள்ள வொக்கலிகா சமூக வாக்குகள் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்கும் செல்ல வாய்ப்புகள் அதிகம் என்பதால் ஜேடிஎஸுக்கு இந்த முறை கடும் சவாலாகவே உள்ளது.

ஆம் ஆத்மி
இவர்களைத் தவிர ஆம் ஆத்மி கட்சியும் கர்நாடக தேர்தலில் களமிறங்குகிறது. அவர்கள் கர்நாடகாவில் அனைத்து இடங்களிலும் போட்டியிட உள்ளனர். சமீபத்தில் தான் ஆம் ஆத்மி கர்நாடகா தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம், உள்ளூர் மக்களுக்கு வேலைகளில் 80 சதவீத இட ஒதுக்கீடு, பெண்களுக்கு அரசு வேலைகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 10 வாக்குறுதிகள் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications