"அடிச்சு பல்லை உடைச்சுடுவேன், ஜாக்கிரதை!" போலீஸ் அதிகாரியை மிரட்டிய காங். எம்எல்சி.. பரபர சம்பவம்
பெங்களூர்: பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி ஒருவரைக் கர்நாடக காங்கிரஸ் தலைவர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் பரபரப்பான அரசியல் சூழலே நிலவி வருகிறது. அங்குத் தொடர்ச்சியாகக் குறிப்பிட்ட மதத்தினர் குறிவைத்துத் தாக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
ஹிஜாப் சர்ச்சை தொடங்கி ஹலால் கறி வரை பல்வேறு விவகாரங்களில் தொடர்ச்சியாகச் சர்ச்சை எழுந்துள்ளன. இதனால் அங்குப் பரபரப்பான சூழலே காணப்படுகிறது.

கர்நாடக தேர்தல்
இப்படியொரு சூழலில் கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இப்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ் அங்கு எதிர்க்கட்சியாக உள்ள நிலையில், அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கு எண்ணும் மையம்
இதற்கிடையே அங்கு வடமேற்கு ஆசிரியர் தொகுதிக்கான எம்எல்சி தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிந்து வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கப்பட்டன. அந்தச் சமயத்தில் அங்கு முறைகேடு நடக்கலாம் என்று கூறி காங்கிரஸ் கட்சியினர் வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்றனர்.

மறுப்பு
அப்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஹுக்கேரி தனது ஆதரவாளர்கள் உடன் வாக்கு எண்ணும் மையத்திற்குச் சென்றுள்ளார். இருப்பினும், அங்கு பணியில் இருந்த பெலகாவி காவல் உதவி ஆணையர் (ஏசிபி) சதாசிவ் கட்டிமானி அவரை மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அங்குச் சலசலப்பு ஏற்பட்டது.

காரணம்
அப்போது அங்கு வந்த காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி ஹெப்பால்கர் போலீஸ் அதிகாரி சதாசிவ் கட்டிமானியுடன் வாக்குவாதம் செய்தார். முறையான அனுமதிச்சீட்டு இல்லாமல் வந்ததாலேயே வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

மிரட்டல்
இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைலராகி உள்ளது. அதில் காங்கிரஸ் எம்எல்சி ஹுக்கேரி போலீசாரிடம், "உன் பல்லை உடைச்சுடுவேன்.. ஜாக்கிரதை" என்றார். ஹுக்கேரி வடமேற்கு ஆசிரியர் தொகுதியில் வெற்றி பெற்ற பின்னரும் கூட தனது நடத்தைக்காக போலீசாரிடம் மன்னிப்பு கேட்கவில்லை












Click it and Unblock the Notifications