ஊழியர்களுக்கான கடிதத்தில் உள்ளது வேறு.. சித்தார்த்தா கையெழுத்து மாறுபடுகிறது.. வருமான வரித்துறை
Recommended Video
பெங்களூரு: சித்தார்த்தாவிற்கு வருமான வரித் துறை அழுத்தம் கொடுத்ததாக வெளியான தகவல் தவறானது என பெங்களூரு வருமான வரித் துறை தகவல் தெரிவித்துள்ளது.
காபி டே நிறுவனர் சித்தார்த்தா நேற்று முன் தினம் நேத்ராவதி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் இன்று காலை மீட்கப்பட்டது. இந்த நிலையில் அவர் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் அதாவது 27-ஆம் தேதி, தனது ஊழியர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்த போதிலும் தனது மைன்ட் டிரீ மற்றும் காபி டே நிறுவன பங்குகளை விற்க விடாமல் இரு முறை வருமான வரித் துறையினர் முடக்கிவைத்தனர். எனக்கு வருமான வரித் துறையின் முன்னாள் இயக்குநர் மிகவும் நெருக்கடி கொடுத்தார் என அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

சித்தார்த்தா
இதற்கு மறுப்பு தெரிவித்து வருமான வரித் துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் காபி டே நிறுவனர் சித்தார்த்தா எழுதியதாக கூறப்படும் ஒரு கடிதத்தில் வருமான வரித் துறையினர் அவரது சொத்துகளை முடக்கி வைத்ததாக கூறப்பட்டுள்ளது.

வித்தியாசம்
இதில் உண்மை இல்லை. மேலும் கடிதத்தின் உண்மை தன்மை குறித்தும் தெரியவில்லை. ஏனெனில் அந்த கடிதத்தில் உள்ள சித்தார்த்தாவின் கையெழுத்திற்கும் அவர் வருமான வரித் துறைக்கு வழங்கிய ஆண்டு அறிக்கையில் இடம் பெற்றுள்ள கையெழுத்திற்கும் வித்தியாசம் உள்ளது.

சித்தார்த்தாவின் பணம்
கர்நாடகத்தில் பிரபல அரசியல்வாதியின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. கிடைத்த தகவலின் அடிப்படையில் சித்தார்த்தாவின் வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து 1.20 கோடி ரூபாய் சிக்கியது. அது சித்தார்த்தாவின் பணம் என அந்த நபர் தெரிவித்தார்.

வரி செலுத்தவில்லை
சோதனையின் போது கணக்கில் வராத ரூ 480 கோடி பணத்தை தன்னுடையதுதான் என சித்தார்த்தாவே ஒப்புக் கொண்டார். அந்த பணத்திற்கு தான் வரியை செலுத்தாததையும் அவர் ஒப்புக் கொண்டார்.

சொத்தை வழங்குதல்
இந்த நிலையில்தான் மைன்ட் டிரீ நிறுவனத்தில் சித்தார்த்தாவுக்கு சொந்தமான 21 சதவீத பங்குகளை விற்க முடிவு செய்த தகவலை அறிந்தோம். இதையடுத்து அதை விற்பனை செய்வதற்கு தடை விதித்தோம். பின்னர் வருமான வரித் துறைக்கு சித்தார்த்தா ஒரு கடிதம் எழுதினார். அதில் மைன்ட் டிரீ பங்குகளை விடுவிக்க கோரியும், அதற்கு பதிலாக வேறு ஒரு நிறுவனத்தின் சொத்தை வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.

சட்டப்படி செய்தோம்
அதையும் நாங்கள் ஒப்புக் கொண்டோம். பின்னர் மைன்ட் டிரீ நிறுவன பங்குகளை விற்பனை செய்ததில் ரூ 3200 கோடி அவருக்கு கிடைத்தது. இதில் ரூ 3000 கோடி கடனை அடைத்தார். ரூ 46 கோடியை வருமான வரியாக செலுத்தினார். மீதமிருந்த வரியை அவர் செலுத்தவில்லை. அதனால் அவரது நிறுவனத்துக்கு சொந்தமான 400 கோடி ரூபாய் சொத்தை முடக்கினோம். எனவே சித்தார்த்தா விவகாரத்தில் நாங்கள் சட்டப்படிதான் செயல்பட்டோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications