நடுரோடுனு கூட பார்க்கலையே.. ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்த ராகுல் டிராவிட்.. என்ன நடந்தது?
பெங்களூர்: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட் சாலையில் நின்று ஆட்டோ ஓட்டுநர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ராகுல் டிராவிட்டின் காரில் ஆட்டோ மோதியதால் விபத்து ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக இறங்கி வாக்குவாதம் செய்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட் பெங்களூரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். டி20 உலகக்கோப்பை வெற்றியுடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதன்பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அவர், எந்த ஐபிஎல் அணியுடன் கைகோர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மும்பை, லக்னோ, டெல்லி என்று பல்வேறு அணிகளும் ராகுல் டிராவிட்டுக்கு வலைவிரித்தன. ஆனால் தனது மோசமான சூழலில் ஆதரவாக இருந்த ராஜஸ்தான் அணியின் கோரிக்கையை ஏற்று, அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்று கொண்டார். அதன்பின் ராஜஸ்தான் அணியின் உள்ளூர் வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் சில பயிற்சிகளை அளித்து வந்தார்.
அடுத்த மாதம் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதில் பங்கேற்க ராகுல் டிராவிட் தயாராகி வருகிறார். வழக்கமாக ராகுல் டிராவிட் தனது கோபத்தை வெளிக் காட்ட மாட்டார். ஒரேயொரு விளம்பரத்தில் ராகுல் டிராவிட் கோபமாக நடித்ததே ஆச்சரியமாக இருந்தது. இந்த நிலையில் பெங்களூரில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருடன் ராகுல் டிராவிட் டென்ஷனில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஜங்க்ஷனில் இருந்து கன்னிங்ஹம் சாலை வழியாக ஹை கிரவுண்ட்ஸ் பகுதிக்கு ராகுல் டிராவிட் பயணித்துள்ளார். கன்னிங்ஹம் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்த போது, ராகுல் டிராவிட்டின் காரினை பின்னால் வந்த சரக்கு ஆட்டோ மோதி இருக்கிறது. இதனால் ராகுல் டிராவிட்டின் கார் சிறியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் உடனடியாக காரில் இருந்து வெளியில் வந்த ராகுல் டிராவிட், ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன்பின் அடுத்த சில நிமிடங்களில் ராகுல் டிராவிட் புறப்பட்டு சென்றுள்ளார். இதுதொடர்பாக ராகுல் டிராவிட் இதுவரை எந்த புகாரும் அளிக்கவில்லை. அதேபோல் காரை ராகுல் டிராவிட் ஓட்டி வந்தாரா என்பதும் உறுதி செய்யப்படாமல் இருக்கிறது.
ஆனால் காரில் புறப்படுவதற்கு முன்பாக விபத்து ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநரின் செல்ஃபோன் நம்பர் மற்றும் ஆட்டோரின் நம்பர் இரண்டையும் ராகுல் டிராவிட் வாங்கி சென்றதாக அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். காலை 6.30 மணியளவில் நிகழ்ந்த விபத்து என்பதால், உடனடியாக ராகுல் டிராவிட்டை அடையாளம் கண்டு அங்கு கூட்டம் கூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications