சென்னை - கவுகாத்தி இண்டிகோ விமானத்தில் "மேடே" அழைப்பு விடுத்த விமானிகள்.. பதறிய பயணிகள்!
சென்னை: அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு பயணிகளுடன் வானில் பறந்து வந்துகொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் இருந்து விமானிகள் மேடே அழைப்பு விடுத்ததால் அவசர அவசரமாக பெங்களூரில் தரையிறக்கப்பட்டது. நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமான நிறுவனத்தின் விமானம் இயகப்பட்டு வருகிறது. இந்த விமானம் வழக்கம் போல சென்று கொண்டிருந்த போது திடீரென விமானிகள் மே டே அறிவிப்பு வெளியிட்டு பெங்களூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கியுள்ளனர்.

சென்னை வந்த இண்டிகோ விமானம்
மேடே என்பது விமானத்தில் அவசர காலங்களில் விடுக்கப்படும் கடைசி கட்ட அழைப்பாகும். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டதால் அவசர அவசரமாக விமானிகள் இந்த எமர்ஜென்சி அழைப்பை விடுத்துள்ளனர். இதையடுத்து விமானம் பெங்களூரில் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
விமானம் உரிய நேரத்தில் தரையிறக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் மாலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. குஜராத் மாநிலம் அகமாதாத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் விழுந்து விபத்தில் சிக்கியது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் பயணித்த ஒரேயொரு பயணியை தவிர ஏனைய அனைவரும் உயிரிழந்தனர்.
இந்த விமான விபத்தில் மொத்தம் 270 பேர் பலியானது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விமான விபத்தையடுத்து, கடந்த சில நாட்களாக அனைத்து விமானங்களில் தீவிர பாதுகாப்பு பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால் சிறிய தொழில் நுட்ப கோளாறு அறிகுறி இருந்தால் கூட விமானம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இத்தைகைய சூழலில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக விமானம் மே டே அழைப்பு விடுத்து தரையிறங்கியது பெரும் அதிர்ச்சியையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
மேடே அழைப்பு விடுப்பது ஏன்?
மேடே என்பது விமானத்தில் மிகவும் அவசரமான சூழ்நிலை அல்லது நிலைமை கைமீறிச் செல்லும்போது பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். . இது, 'மெய்டர்' என்ற பிரெஞ்சு சொற்றொடரிலிருந்து வந்தது, அதாவது, 'எனக்கு உதவுங்கள்' என்பதே இந்த வார்த்தையின் அர்த்தமாக உள்ளது. விமானங்கள் மற்றும் கப்பல்களில் ஆபத்து இருப்பதை உணர்ந்து விமானி கூறும் வார்த்தையாக இது பயன்படுத்தப்படுகிறது.
மிகவும் அவசரமான சூழ்நிலையில் விமானி விரைவாக செய்தியை அனுப்பவும், அனைவருக்கும் நிலைமையின் தீவிரம் புரியும் வகையிலும் இந்த வார்த்தை விமானத்தில் விமானிகளால் பயன்படுத்தப்படுகிறது. விமான கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் அதிகாரிகளுக்கு ரேடியோ அலைவரிசையில் சிக்னல் சரியாக இல்லையென்றாலும் புரியும் வகையில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications