“கையிலே ஆகாசம்”.. நிலாவை முத்தமிடும் முதல் வீடியோ! சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் கேமராவின் காட்சி
பெங்களூர்: சந்திரயான் 3 திட்டம் வெற்றிபெற்று இருக்கும் நிலையில் நிலாவை விக்ரம் லேண்டர் தொடும்போது எடுக்கப்பட்ட வீடியோவை இஸ்ரோ வெளியிட்டு இருக்கிறது.
சந்திரயான் 3 வெற்றியின் மூலம் ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியா இணைந்து உள்ளது. கடந்த 2008ல் சந்திராயன் 1 விண்கலத்தை இஸ்ரோ நிலவிற்கு அனுப்பியது. நிலவில் இருந்து எடுத்து அது எடுத்து அனுப்பிய ஏராளமான படங்களின் மூலம் நிலவில் நீர் இருக்கும் சுவடுகள் தெரிந்தன.

2 வது முறையாக கடந்த 2019 ஆம் ஆண்டு இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. ஆனால் ரோவர் கருவி நிலவில் தரையிறங்கும்போது அது வேகமாக மோதி வெடித்தது. ஆனாலும் அதன் ஆர்ப்பிட்டர் தொடர்ந்து பல்வேறு தகவல்களை அனுப்பி வருகிறது. சந்திரயான் 3 திட்டத்துக்கும் அது உதவியது.
சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி நிலவின் இருண்ட பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து ஏவப்பட்ட சந்திரயான் 3 முதல் முறையாக நிலவின் தென் பகுதியில் விண்கலத்தை நிலை நிறுத்தும் வகையில் அனுப்பப்பட்டது.

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 5 முறை பூமியின் நீள் வட்டப் பாதையில் சுற்றி வந்தது. அதன் பின்னர் நிலவின் ஆர்பிட்டுக்குள் சந்திரயான் 3 நுழைந்து பல நாட்கள் நீள் வட்டப்பாதையில் சுற்றியது. சந்திராயன் 3 விண்கலம் நேற்று மாலை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி இருக்கிறது.
விக்ரம் லேண்டர் நிலாவை தொட்டவுடன் சந்திரயான் 3 விண்கலம், "இந்தியா.. நான் எனது இலக்கை எட்டிவிட்டேன். நீங்களும்தான்." என இஸ்ரோவுக்கு ஒரு மெசேஜை அனுப்பியது. நிலவிற்கு விண்கலம் அனுப்பிய 4 வது நாடு என்ற பெருமையை இந்தியா இதன் மூலம் பெற்றுள்ளது.
விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் நிலை நிறுத்திய முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்று உள்ளது. நேற்றே விக்ரம் லேண்டர் - பெங்களூரு இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தின் இணைப்பு வெற்றிகரமாக நடந்தது. அதை தொடர்ந்து விக்ரம் லேண்டரின் மீது படிந்து இருந்த நிலவின் தூசு விலகி பிரக்யான் ரோவர் நேற்று வெளியேறியது.
Here is how the Lander Imager Camera captured the moon's image just prior to touchdown. pic.twitter.com/PseUAxAB6G
— ISRO (@isro) August 24, 2023
இந்த நிலையில் இன்று மாலை முழுமையாக விக்ரம் லேண்டரை விட்டு பிரிந்து சென்று ரோவர் ஆய்வை தொடங்கி உள்ளது. லேண்டரில் இருக்கும் chaSTE, ILSA, RAMBHA, ஆகியவை இயக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது. இந்த நிலையில் நிலவை விக்ரம் லேண்டர் தொடும்போது அதில் இருந்த கேமரா எடுத்து அனுப்பிய வீடியோவை தற்போது இஸ்ரோ பகிர்ந்து உள்ளது.
2 நிமிடங்கள் 13 வினாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் நிலவின் குண்டும் குழியுமான மேற்பரப்பு அழகாக காட்சிபடுத்தப்பட்டு உள்ளது. நேற்று விக்ரம் லேண்டர் எடுத்த புகைப்படங்களையும் இஸ்ரோ பகிர்ந்து இருந்தது. பார்க்கவே பிரமிப்பை தரும் இந்த நிலவின் மேற்பரப்பில் 14 நாட்கள் இருக்கும் இந்த ரோவர் மண் தன்மை, வளி மண்டலம் போன்றவை பற்றி ஆய்வு செய்ய உள்ளது.












Click it and Unblock the Notifications