40 ஆண்டுக்கால ஏக்கத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி! வெற்றிகளை தொடர்ந்து.. மாஸ் அப்டேட் கொடுத்த இஸ்ரோ
பெங்களூர்: சந்திரயான்-3 யை தொடர்ந்து ஆதித்யா எல்1 உள்ளிட்ட திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது 'ககன்யான்' திட்டத்தில் இஸ்ரோ முழு கவனம் செலுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கான பணிகள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்த வெற்றியை தொடர்ந்து பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் சேர்ந்து விண்வெளி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன. இந்நிலையில் இந்தியாவுக்கு மற்றொரு மைல் கல்லாக அமைந்துள்ளது ஆதித்யா எல்1 எனும் திட்டம். அதாவது இந்த திட்டத்தின் மூலம் ஏவப்படும் விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும். காந்த புயல்களை முன்கூட்டியே கணிக்கவும், சூரியனின் பல்வேறு அடுக்குகளை ஆய்வு செய்யவும் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளும்.
இந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் கருவிகளுடன் ஆதித்யா எல்1 விண்கலம் PSLV-C57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து நேற்றுக்காலை 11.50 மணியளவில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பும் முதல் விண்கலம் இது என்பதால் உலக நாடுகளே இந்த மிஷன் மீது மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டிருந்தனர். ஆதித்யா எல்1 விண்வெளியில் ஏவப்பட்ட நிலையில், அது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள எல்1 எனும் புள்ளியில் நிலைநிறுத்தப்படும்.
இந்த புள்ளிக்கு விண்கலம் சென்றடைய 125 வரை ஆகும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இப்படியாக இந்த இரண்டு வெற்றிகளை தொடர்ந்து மூன்றாவதாக மிக முக்கியமான திட்டத்தின் பணிகளை இஸ்ரோ அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. அதாவது ககன்யான் திட்டத்தின் தொடக்க பணிகள் அடுத்த மாதம் துவங்குகிறது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி திரும்ப பத்திரமாக அழைத்து வருவதுதான் ககன்யான் திட்டமாகும்.
விண்வெளிக்கு இந்தியா சாட்டிலைட்களை அனுப்பியிருந்தாலும் மனிதர்கள் இதுவரை அனுப்பவில்லை. ஆனால் இந்தியாவை சேர்ந்த ஒருவரை சோவியத் ரஷ்யா 1984ம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பி வைத்தது. சோவியத் ரஷ்யாதான் விண்வெளி துறையை பொறுத்த அளவில் இந்தியாவுக்கு உற்ற நண்பன். 1917ம் ஆண்டு தொடங்கி 1990 வரை சோவியத் ரஷ்யாவின் அபரிமிதமான வளர்ச்சியை கண்டனது. நிலவில் முதலில் கால் வைத்தது மட்டும்தான் அமெரிக்கா செய்த ஒரே சாதனை.
முதல் செயற்கைக்கோள், முதல் விண்வெளி ஆராய்ச்சியாளர், விண்வெளிக்கு முதலில் உயிரினங்களை அனுப்பியது, மனிதர்களை அனுப்பியது, பெண்களை அனுப்பியது என சோவியத் ரஷ்யா ஏராளமான சாதனைகளை செய்தது. மட்டுமல்லாது இந்தியா போன்ற வளர்ந்து வந்த நாடுகளுக்கு விண்வெளி மீதான ஆர்வத்தை தூண்ட இந்த நாடுகளிலிருந்து வீரர்களை சோவியத் ரஷ்யா தனது சொந்த ராக்கெட்டில் விண்வெளிக்கு அழைத்து செல்ல முன்வந்தது.
அப்படி இந்தியா சார்பில் முதன் முதலில் விண்வெளிக்கு பறந்தவர்தான் ராகேஷ் ஷர்மா. இதன் பின்னர் 40 ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனால் இன்னும் ஒரு இந்தியர் கூட விண்வெளிக்கு மீண்டும் போகவில்லை. எனவே இந்த ஏக்கத்தை போக்க ககன்யான் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த முயன்று வருகிறது. இதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தற்போது கூறியுள்ளார். இந்த திட்டம் மூலம் 40 ஆண்டுகால ஏக்கம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications