“இதுதான் நம் முதுகெலும்பு”.. காவிரி விவகாரத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் வைத்த கோரிக்கை
பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய அளவு நீரை திறந்து விட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்.
காவிரி நீரை பெறுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து கர்நாடக மாநிலத்திடம் போராட வேண்டியதாக இருக்கிறது. இந்த முறையும் காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி கர்நாடகா தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்கவில்லை. எனவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. தற்போது செப்டம்பர் மாதம் முடிய இருக்கிறது. இருப்பினும் ஆகஸ்ட் மாதத்திற்கான 37.9 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா இன்னும் வழங்கவில்லை.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு நாடியிருந்தது. கடைசியாக கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி மனுவை விசாரித்த நீதிமன்றம் ஆணையம் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 1ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். ஆனால் அன்று இந்த வழக்கு விசாரணைக்காக பட்டியலிடப்படவில்லை. இதனால் தமிழக அரசு நீதிமன்றத்தில் முறையிட்டது. இதனையடுத்து செப்.6ம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியது.
ஆனால் இந்த வழக்கு விசாரணை அமர்வில் இருந்த நீதிபதி பி.எஸ்.நரசிம்மா விடுப்பில் இருந்ததால் அன்றும் வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. இப்படி தள்ளி தள்ளியே இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். அதன்படி இன்று வழக்கு விசாரணை நடைபெற இருக்கிறது. இதற்கிடையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது.

முன்னதாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் 24வது கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து விநாடிக்கு 5,000 கனஅடி தண்ணீரை 15 நாட்களுக்கு செப்.19 முதல் திறந்து விட வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இப்படியாக தமிழக அரசும், கர்நாடக அரசும் காவிரி தண்ணீருக்காக போராடி வரும் நிலையில், கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், காவிரி விவகாரத்தில் இரு மாநில தலைவர்களும் சுமூக தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் "விவசாயி நாட்டின் முதுகெலும்பு, நம் காவேரி விவசாயியின் முதுகெலும்பு. ஏற்கனவே மாநிலத்தில் போதிய மழை இல்லாததால் விவசாயிகள் சிரமத்தில் உள்ளனர். எனவு இந்த விவகாரத்தில் இரு மாநில தலைவர்களும், நீதிமன்றமும் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து சுமூக தீர்வு காண வேண்டும் என்பதே எனது கோரிக்கை" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications