ரூ.40 லட்சம் லஞ்சம்.. கர்நாடகா பாஜக எம்எல்ஏ மகனை தட்டித்தூக்கிய லோக்ஆயுக்தா..ரூ.7.70 கோடி பறிமுதல்
பெங்களூர்: கர்நாடகா பாஜக எம்எல்ஏவான மதல் விருபாக்சப்பா சார்பில் டெண்டர் விவகாரத்தில் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய அவரது மகனான அரசு அதிகாரியான பிரசாந்த் மதலை லோக்ஆயுக்தா அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். மேலும் பிரசாந்த் மதல் அலுவலகத்தில் இருந்து 1.70 கோடியும், மதல் விருபாக்சப்பாவின் எம்எல்ஏ அலுவலகத்தில் ரூ.6 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கர்நாடகா பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ள நிலையில் இந்த சம்பவம் அக்கட்சிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் மதல் விருபாக்சப்பா. இவர் பாஜக கட்சியை சேர்ந்தவர். இவர் கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் (கேஎஸ்டிஎல்) தலைவராக இருக்கிறார்.
இவரது மகன் பிரசாந்த் மதல். இவர் அரசு அதிகாரி ஆவார். இவர் பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் (BWSSB)தலைமை கணக்காளராக பணியாற்றி வருகிறார்.

ரூ.81 லட்சம் லஞ்சமாக கேட்பு
இந்நிலையில் தான் மதல் விருபாக்சப்பா தலைவராக உள்ள கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட்டின் Raw Material டெண்டரை குத்தகைதாரர் ஒருவர் எடுக்க முயன்றார். இதற்கு ரூ.81 லட்சம் லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் குத்தகைதாரர் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. இதனால் லோக்ஆயுக்தாவில் புகார் தெரிவித்தார்.

எம்எல்ஏ மகன் கைது
இந்த புகாரை தொடர்ந்து லோக் ஆயுக்தா அதிகாரிகளின் ஆலோசனைப்படி நேற்று ரூ.40 லட்சத்தை குத்தகைதாரர் வழங்கினார். பாஜக எம்எல்ஏ மதல் விருபாக்சப்பாவின் மகன் பிரசாந்த் மதல் பணத்தை பெற்று கொண்டார். அப்போது அங்கு இருந்த லோக் ஆயுக்தா அதிகாரிகள் அவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.7.70 கோடி பறிமுதல்
இதையடுத்து பிரசாந்த் மதலின் அலுவலகத்தில் அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது கணக்கில் இல்லாத ரூ.1.70 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பெங்களூர் கிரிசென்ட் ரோட்டில் உள்ள மதல் விருபாக்சப்பாவின் அலுவலகத்தல் அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின்போது மொத்தம் ரூ.6 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து லஞ்சம் பணம் ரூ.40 லட்சம் தவிர மொத்தம் ரூ.7.70 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

எம்எல்ஏவுக்கு சம்மன்?
மேலும் கர்நாடக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பிரசாந்த் மதல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் பாஜக எம்எல்ஏவான மதல் விருபாக்சப்பாவிடமும் லோக்ஆயுக்தா விசாரிக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவருக்கு விரைவில் சம்மன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே கர்நாடகா பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ள நிலையில் இந்த சம்பவம் அக்கட்சிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications