பாலியல் வழக்கில் சாமியார்.. ஓட்டுக்காக கட்சிகள் அமைதி! கர்நாடக அரசு மீதே பாஜக எம்எல்சி பரபர புகார்
பெங்களூரு: கர்நாடகாவில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள லிங்காயத்து சாமியாருக்கு எதிராக பேசினால் வாக்குகள் குறைந்துவிடும் என்று அரசியல் கட்சிகள் அஞ்சுவதாக பாஜக சட்டமேலவை உறுப்பினர் எச்.விஸ்வநாத் குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் லிங்காயத்து மதத்தினரின் முருகமடம் இயங்கி வருகிறது. இங்கு மடாதிபதியாக செயல்பட்டு வருபவர் சிவமூா்த்தி முருகா சரணரு. இந்த மடம் சார்பில் தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் 10ம் வகுப்பு மாணவிகள் 2 பேரை மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

மடாதிபதி மீது புகார்
இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள், மைசூரில் உள்ள அரசு சாரா சமூக சேவை அமைப்பில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை தொடர்பு கொண்டு புகாரளித்துள்ளனர். அதன் அடிப்படையில், குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரி, மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு மீது மைசூர் நஜர்பாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போக்சோ வழக்கு
இதனை தொடர்ந்து மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மடாதிபதிக்கு உடந்தையாக இருந்து வந்ததாக விடுதியின் வார்டன் ரஷ்மி, பசவதித்தியா, பரமசிவன், கங்காதரய்யா ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

புகாருக்கு மறுப்பு
கர்நாடகாவில் அதிக செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்த மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "இந்த புகார்கள் உண்மைக்கு எதிரானவை. இதன் பின்னணியில் முன்னாள் எம்எல்ஏவும், மடத்தின் நிர்வாக அதிகாரி எஸ்கே பசவராஜன் இருக்கின்றனர்." என என்.விஸ்வநாத் தெரிவித்தார்.

முதலமைச்சர் விளக்கம்
இது குறித்து கருத்து தெரிவித்து உள்ள கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, "இது மிகவும் முக்கியமான வழக்கு. போக்சோ மற்றும் கடத்தல் வழக்கு பதியப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருவதால், கருத்து தெரிவிக்க தெரிவிக்க முடியாது. போலீசாருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் உண்மை வெளிவரும்." என்றார்.

பாஜக எம்.எல்.சி
இந்த விவகாரத்தில் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணருவை கர்நாடக அரசு இதுவரை கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பேசிய பாஜகவை சேர்ந்த கர்நாடக சட்டமேலவை உறுப்பினர் எச்.விஸ்வநாத், "மடாதிபதி மீது உள்துறை அமைச்சர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத சித்ரதுர்கா எஸ்பியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

பிரதமருக்கு கடிதம்
சிறுமிகளுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு விரிவான கடிதம் எழுதி இருக்கிறேன். அரசியல்வாதிகள், எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து வாய் திறக்காமல் உள்ளனர். இதைபற்றி பேசினால் வாக்குகள் குறைந்துவிடுமோ என்று அரசியல் கட்சிகள் அஞ்சுகின்றனர். வாக்குகளுக்காக சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவரை ஆதரிக்கிறீர்களா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications