மூடநம்பிக்கையை உடைத்தெறிந்த ‛‛கர்நாடகா கருணாநிதி’’ சித்தராமையா! 4 வருஷமாக பூட்டிய கதவு திறப்பு
பெங்களூர்: பெங்களூர் விதானசவுதாவில் வாஸ்து சரியில்லை எனக்கூறி முதல்வர்கள் பயன்படுத்த பயந்து கடந்த 4 ஆண்டுகளாக வாசல் கதவு ஒன்று பூட்டி வைக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி அறிந்த தற்போதைய முதல்வர் சித்தராமையா தரமான செயல் ஒன்றை செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா முதல்வரானார். இவர் கடந்த 2013 முதல் 2018 வரை முதல்வர் பதவியில் இருந்த நிலையில் தற்போது 2வது முறையாக அந்த பதவியை எட்டிப்பிடித்துள்ளார்.

முதல்வர் பதவியை பிடிப்பதில் இந்த முறை கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக அதில் சித்தராமையா வென்று முதல்வராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் பெங்களூரில் அமைந்துள்ள விதானசவுதாவில் (கர்நாடகா சட்டசபை கட்டடம்) முதல்வர் சித்தராமையாவின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் தெற்கு நோக்கிய வாசல் மட்டும் திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. அலுவலகத்தில் பல மீட்டிங்கள் நடந்தாலும் அந்த கதவு மட்டும் திறக்கப்படவே இல்லை. இதனை சித்தராமையா தொடர்ந்து கவனித்து வந்தார்.
இந்நிலையில் தான் நேற்று அவர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் தெற்கு நோக்கிய கதவு மட்டும் ஏன் திறக்கப்படாமல் இருக்கிறது என கேட்டார். அதற்கு அவர்கள் வாஸ்து சரியில்லை. மேலும் அந்த வாசல் வழியாக வந்து சென்றால் நல்லது நடக்காது என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் நீண்டகாலமாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது என்றனர்.
இதையடுத்து உடனடியாக சித்தராமையா அந்த வாசல் கதவின் சாவியை எடுத்து வந்து திறக்கும்படி கூறினார். அதிகாரிகள் சாவியை எடுத்த வந்து கதவை திறந்தனர். இதையடுத்து சித்தராமையா மற்றும் அதிகாரிகள் அந்த வாசல் கதவின் வழியே அலுவலகம் சென்று அன்னபாக்யா திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிந்த பிறகும் தெற்கு பார்த்த அந்த வாசல் கதவின் வழியே சித்தராமையா அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்.
இதுபற்றி சித்தராமையா கூறுகையில், ‛‛நல்ல மனம், தூய்மையான இதயம், பிறர் மீதான அக்கறை, அறைக்குள் நல்ல காற்று வருவது, நல்ல வெளிச்சம் இருப்பது இதுதான் சிறந்த வாஸ்து. மாறாக வாஸ்து என்ற பெயரில் சுவர்களை இடிப்பது, கதவுகளை ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்துக்கு மாற்றம் செய்வது உள்ளிட்டவை வாஸ்து அல்ல. அது மூடநம்பிக்கை'' என தெரிவித்துள்ளார்.
இந்த அறையை இதற்கு முன்பு முதல்வராக இருந்த ஜேடிஎஸ்ஸின் குமாரசாமி, பாஜகவின் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை உள்ளிட்டவர்கள் பயன்படுத்தி ள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக வாஸ்து சரியில்லை. இந்த வாசல் கதவின் வழியாக சென்றால் நல்லது நடக்காது என்ற நம்பிக்கையில் பூட்டப்பட்டு இருந்தத. இந்நிலையி்ல தான் தற்போது சித்தராமையா அதனை திறந்து பயன்படுத்த தொடங்கி உள்ளார்.
கர்நாடகா முதல்வராக உள்ள சித்தராமையா மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிரானவர். கோவிலுக்கும் அதிகமாக செல்வது இல்லை. மாறாக தொண்டர்கள், அரசு திட்டங்கள் தொடங்கி வைப்பதற்கு மட்டுமே கோவிலுக்கு செல்வார். அதோடு மூடநம்பிக்கைக்கு எதிராக இவர் பல்வேறு விஷயங்களை இதற்கு முன்பு செய்துள்ளார். பொதுவாக திட்டங்கள் துவங்கி வைப்பது பட்ஜெட் தாக்கல் செய்ய நல்ல நேரம் பார்ப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் 12 முறை கர்நாடகா பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள சித்தராமையா நல்லநேரம் பார்ப்பது இல்லை.
மேலும் கர்நாடகாவை பொறுத்தமட்டில் முதல்வராக உள்ள ஒருவர் சாம்ராஜ் நகர் மாவட்டத்துக்கு சென்றால் பாதியில் பதவியை இழப்பார் என்பது காலம்காலமாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால் அந்த நம்பிக்கையை சித்தராமையா உடைத்தார். கடந்த 2013-2018 வரை 5 ஆண்டுகள் சித்தராமையா முதல்வராக இருந்தபோது அவர் பலமுறை சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு சென்று மூடநம்பிக்கையை ஒழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications