பெங்களூர் மெட்ரோ பெயர் மாறுகிறது.. ‛நம்ம மெட்ரோ’ டூ ‛பசவா மெட்ரோ’.. சித்தராமையா முடிவு
பெங்களூர்: பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டம் ‛நம்ம மெட்ரோ' என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில் திட்டத்தின் பெயரை மாற்றி ‛பசவா மெட்ரோ' என வைக்க கர்நாடகா முதல்வர் சித்தராமையா முடிவு செய்து அதற்கான முன்மொழிவை கூறியுள்ளார். இதில் ‛பசவா' என்பது யாரை குறிக்கும், அவரது பின்னணி என்ன? இந்த பெயர் மாற்றம் எப்படி காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் ரீதியாக உதவும் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை நடைமுறையில் உள்ளது. அதேபோல் மெட்ரோ ரயில் சேவையை விரிவுப்படுத்துவதற்கான பணிகளும் நடந்து வருகிறது. பெங்களூரன் மெட்ரோ ரயில் திட்டம் ‛நம்ம மெட்ரோ' என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த பெயரை தான் மாற்ற வேண்டும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா முடிவு செய்துள்ளார்.

அதாவது பெங்களூரில் இன்று பசவ கலாச்சார பிரசாரம் 2025 (Basava Culture Campaign 2025) நிறைவு விழா நடந்தது. இந்த விழாவில் முதல்வர் சித்தராமையா பங்கேற்று பேசினார். அப்போது தான் அவர் இந்த முன்மொழிவை கூறினார்.
இதுதொடர்பாக சித்தராமையா கூறுகையில், ‛‛பசவண்ணாவின் லட்சியங்கள் காலத்தால் அழியாதவை. நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள கொள்கைகளை அவரது லட்சியங்கள் பிரதிபலிக்கின்றன. சமத்துவம், சநீதி, சமூக நல்லிணக்கம் உள்ளிட்டவை அவர் போதித்துள்ளார். இதனால் பெங்களூர் மெட்ரோவுக்கு அவரது பெயரை சூட்டுவது பொருத்தமாக இருக்கும்.
இந்த பெயரை மாநில அரசால் மட்டும் வைக்க முடியாது. இதற்கு மத்திய அரசின் அனுமதி தேவை. மாநில அரசால் பெயரை மாற்ற முடியும் என்றால் நாங்களே உடனடியாக மாற்றி இருப்போம்.'' என்று கூறினார். இதுதொடர்பாக விரைவில் சித்தராமையா அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்ப உள்ளார். அதில் பெங்களூர் ‛நம்ம மெட்ரோ' பெயரை ‛பசவா மெட்ரோ' என மாற்றம் செய்ய அனுமதி கோர உள்ளார். இதற்கு முக்கிய காரணம் பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டம் மத்திய - மாநில அரசின் கூட்டு நடவடிக்கையாகும். இதனால் பெயர் மாற்றத்துக்கு மத்திய அரசின் அனுமதி தேவையானதாக உள்ளது.
மேலும் சித்தராமையா கூறிய பசவண்ணர் யார்? என்றால் அவர் 12ம் நூற்றாண்டின் சமூக சீர்த்திருத்தவாதி ஆவார். இவர் அனுபவா மண்டபத்தை தொடங்கினர். சமத்துவம் மற்றும் சமூக சீர்த்திருத்த்தை ஊக்குவிக்கும் வகையில் ஆன்மீகம் மற்றும் அறிவுசார் மன்றமாக செயல்பட்டது. சாதிய பாகுபாட்டை ஒழிக்க அவர் குரல் கொடுத்தார். அதுமட்டுமின்றி பக்தி மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க அவர் பாடுபட்டார். மேலும் கர்நாடகாவில் லிங்காயத் சமுதாயத்தினர் பசவண்ணரை பின்பற்றி வருகின்றனர்.
லிங்காயத் மக்கள் தற்போது பாஜகவின் பக்கம் உள்ளன. தற்போது பெங்களூர் ‛நம்ம மெட்ரோ'வின் பெயர் ‛பசவா மெட்ரோ' என மாற்றம் செய்யப்படும் பட்சத்தில் லிங்காயத்து சமுதாய மக்களின் ஓட்டுகளை காங்கிரஸ் பக்கம் இழுக்கலாம் என்று சித்தராமையா கணக்கு போட்டு இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதனால் இந்த பெயர் மாற்றத்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக கர்நாடகா அரசு சார்பில் பசவண்ணர் கர்நாடகாவின் கலாசார தலைவர். அவரது போட்டோக்களை அனைத்து அரசு அலுவலகங்களிலும் வைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேபோல் பசவண்ணாவின் தத்துவம் மற்றும் இலக்கியம் குறித்த ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக வச்சனா பல்கலைக்கழகத்தை நிறுவும் பணியிலும் அரசு ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications