திமுக உதவியை நாடிய கார்கே? கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சென்னையில் தங்க வைக்கத் திட்டம்?
பெங்களூரு: கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வெளியாகி கொண்டிருக்கும் சூழலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சென்னையில் தங்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூருவில் தங்க வைப்பது குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும் என அஞ்சும் காங்கிரஸ் மேலிடம், இந்த விவகாரத்தில் திமுகவின் உதவியை நாடியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சென்னை அழைத்துவரப்பட்டால் ஈசிஆரில் உள்ள பிரபல ரிசார்ட்டில் தங்க வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அவர்களை தனி விமானத்தில் சென்னை அழைத்து வருவதில் உள்ள சில நடைமுறைச் சிக்கல் காரணமாக பெங்களூருவில் உள்ள ஈகிள் டன் ரிசார்ட்டும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாஜகவின் குதிரை பேரத்திலிருந்து பாதுகாக்கும் பொறுப்பை டி.கே.சிவக்குமார் டீம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனிடையே குமாரசாமியை சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாஜக தலைவர்கள் கூட்டணி ஆட்சியை அமைக்கவும் தயாராக இருப்பதாக செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளன.
கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்றிரவோ அல்லது நாளை காலையோ சென்னை அழைத்து வரப்படுவார்கள் அல்லது பெங்களூருவில் உள்ள ஈகிள் டன் ரிசார்ட்டிலேயே தங்க வைக்கப்படுவார்கள் என்பது நமக்கு கிடைத்துள்ள தகவலாகும்.
கடந்த முறை கோவாவில் நூலிழையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்ததால், கர்நாடக விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் மிகவும் கவனமுடன் காய் நகர்த்தி வருகிறது.
மொத்த 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் தற்போதைய நிலவரப்படி 119 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.












Click it and Unblock the Notifications