டி.கே.சிவகுமார் 12% 'கமிஷன்' அடிக்கிறார்.. மைக் ஆன் செய்தது தெரியாமல் பேசிய காங்கிரஸ் தலைவர்கள்
பெங்களூர்: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் லஞ்சம் வாங்கி குவிக்கிறார் என்று காங்கிரஸ், கட்சியின் முன்னாள் எம்.பி. உக்ரப்பா மற்றும் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மீடியா ஒருங்கிணைப்பாளர் சலீம் ஆகியோர் பேசிக் கொண்டிருந்த ஆடியோ கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக டி.கே.சிவகுமார் பதவி வகித்து வருகிறார்.

டி.கே.சிவகுமார் செல்வாக்கு
டி.கே.சிவகுமார் காங்கிரஸ் மேலிடமான சோனியா காந்தி உள்ளிட்டோருக்கு மிகவும் நெருக்கமானவர். குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலின்போது காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்குவதை தவிர்க்க, டி.கே.சிவகுமாரை நம்பிதான் கர்நாடகாவிற்கு அனுப்பி வைத்தார் சோனியா காந்தி. இந்த நிலையில்தான் பாஜக தலைமையின் நேரடி கோபத்திற்கு ஆளானார் டி.கே.சிவகுமார். வருமான வரித்துறை ரெய்டுகளையும் எதிர்கொண்டார். அதேநேரம், மக்கள் ஆதரவு இருப்பதால் கடந்த முறை காங்கிரஸ் ஆட்சியை பிடித்தபோது, சித்தராமையா முதல்வராக்கப்பட்டார்.

யார் முதல்வர் வேட்பாளர்
2023ம் ஆண்டு நடைபெற உள்ள கர்நாடகா சட்டசபை தேர்தலில், சித்தராமையாவிற்கு பதில் சிவகுமாரை முதல்வர் வேட்பாளராக முன்மொழிய வேண்டும் என்ற கோரிக்கைகள் காங்கிரசில் எழுந்து வருகின்றன. இந்த நிலையில்தான், டி.கே.சிவகுமாருக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் ஒரு ஆடியோ ரிலீசாகியுள்ளது.

காபி குடித்தபடி கதை
சமீபத்தில் பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தனர் உக்ரப்பா மற்றும் சலீம். செய்தியாளர் சந்திப்புக்கு முன்பாக, அனைவருக்கும் காபி வழங்கப்பட்டது. அதை குடித்தபடியே, ஹாயாக உக்ரப்பாவும் சலீமும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் முன்பாக வைக்கப்பட்டிருந்த டிவி சேனல்களின் மைக்குகள் ஆன் நிலையில் இருந்தன. இதை அவர்கள் கவனிக்கவில்லை. தூரத்தில் அமர்ந்திருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு கேட்காது என நினைத்துக் கொண்டு இருவரும் கட்சி கதைகளை பேசிக் கொண்டிருந்தனர்.

12 சதவீதம் கமிஷன்
மெல்லிய குரலில், சலீம் பேசுகையில், முன்பெல்லாம் 8 முதல் 10 சதவீதம் கமிஷன் வாங்கிக் கொண்டிருந்தார்கள். இப்போ சிவகுமார் அதை 10 முதல் 12 சதவீதமாக அதிகரித்து விட்டார். முல்குந்த் (டிகே சிவகுமார் உதவியாளர்) மட்டும் 50 முதல் 100 கோடி சம்பாதித்திருப்பார். அவரே அப்படி சம்பாதித்தால் டி.கே.சிவகுமார் எவ்வளவு சம்பாதித்திருப்பார் நினைத்து பாருங்கள் என்று கூறினார் சலீம். இதை கேட்டுக் கொண்ட உக்ரப்பா, நாமெல்லாம் டி.கே.சிவகுமாரை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்று ரொம்ப பிரயத்தனப் பட்டோம். ஆனால் அவரால் நமக்கும், கட்சிக்கும் கெடுதிதான் ஏற்படுகிறது என்று கூறினார்.

சரக்கு அடிப்பார் போல
மேலும், சலீம் பேசுகையில், சிவகுமார் பேசும்போது தடுமாறுகிறார். பிபி குறைவாக இருக்கிறதா அல்லது குடித்து விட்டு பேசுகிறாரா என்பது தெரியவில்லை. ஆனால், சித்தராமையா கம்பீரமான உடல் மொழி வைத்துள்ளார். இவ்வாறு கூற.. இருவரும் சிரித்துக் கொண்டனர். இந்த வீடியோ வெளியாகி கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிகே சிவகுமார் இதுபோல தர்ம சங்கடத்தில் சிக்குவது இது முதல் முறை கிடையாது. சமீபத்தில், காங்கிரஸ் தொண்டர் ஒருவர் அவர் தோள் மீது கை போட்டபோது ஓங்கி அறைந்து விட்டார். அந்த வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டி.கே.சிவகுமார் அரசியலில் மட்டுமல்லாது, பெரும் தொழிலதிபராகவும் உள்ளார். சித்தராமையா எளிய குடும்ப பின்னணியை சேர்ந்தவர். உக்ரப்பா, சித்தராமையாவின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சி நடவடிக்கை
இதனிடையே, உக்ரப்பா மற்றும் சலீம் இருவரும் இவ்வாறு பேசிய வீடியோவை ஆய்வு செய்த காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு, சலீமை 6 வருடங்களுக்கு காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. உக்ரப்பாவிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும், ஒழுங்கு நடவடிக்கை குழு முடிவு செய்துள்ளது. முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த உக்ரப்பா, ஊழல் இல்லாத கர்நாடகாவை அமைக்க காங்கிரஸ் முயன்று வருவதாகவும், டி.கே.சிவகுமார் பற்றி சலீம் இவ்வாறு பேசியபோது, தான், அவ்வாறு பேசக் கூடாது என அவரைத் தடுக்க முற்பட்டதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications