பெங்களூர் உட்பட.. கர்நாடகாவில் சனிக்கிழமை பந்த்.. ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் ஆதரவு.. அரசு எதிர்ப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் அரசுப் பேருந்து நடத்துனர் தாக்கப்பட்ட விவகாரத்தில் கன்னட அமைப்பு மார்ச் 22 ஆம் தேதி முழு அடைப்பு (பந்த்) அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார், இந்த பந்த்தை நாங்கள் ஆதரிக்க முடியாது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதால் இது மாணவர்களை பாதிக்கும் என்று கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலம், பெலகாவி பகுதியில் மராத்தி மொழியில் பேசவில்லை என்பதற்காக கர்நாடகா அரசுப் பேருந்தான கேஎஸ்ஆர்டிசி நடத்துனர் மீது மராத்தி மொழி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அந்த மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக கன்னட மொழி உணர்வாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

கன்னட ஒக்கூடா என்ற அமைப்பினர் மார்ச் 22 ஆம் தேதி (நாளை) கர்நாடகாவில் காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் கல்வி பாதிக்கப்படும் நிலை உள்ளது. பொது போக்குவரத்து இயங்காவிடின் பெங்களூர் உள்பட மாநிலம் முழுவதும் முடங்கும் அபாயம் உள்ளது.
இந்த முழு அடைப்புக்கு கர்நாடகா மாநில போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் போக்குவரத்து கழகம் சார்பில் அதிகார்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதேபோல ஓலா, உபர், கார் ஓட்டுநர்கள், ஆட்டோ ரிக்ஷா சங்கங்களும் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். மேலும் கன்னட திரைத்துறை, ஹோட்டல் துறையினரும் பந்த்துக்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
மகாராஷ்டிரா எகிகரன் சமிதி அமைப்புக்கு கர்நாடகாவில் தடை விதிக்க வேண்டும், மாநில எல்லை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கன்னட மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்ட ஒருங்கிணைப்பு குழு முன் வைத்துள்ளனர். இதனால் இரு மாநில உறவு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதுகுறித்து கர்நாடகா சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் சாலவாடி நாராயணசாமி, "பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இதனால் மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும் பந்த் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வியை பாதிக்கும்." என்று கூறினார். இதற்கு பதிலளித்த கர்நாடகா மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், "இந்த நேரத்தில் பந்த் தேவையில்லை.
முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தவர்கள் அரசிடம் பேசியிருக்க வேண்டும். இது மாணவர்களின் கல்வியை பாதிக்கும். மார்ச் 22 உலக தண்ணீர் தினம் என்பதால் தண்ணீரை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்க திட்டமிட்டுள்ளோம். அரசு இந்த பந்த்தை ஊக்குவிக்கவில்லை. நீதிமன்றமும் பந்த்துக்கு ஆதரவு கொடுக்கவில்லை. அரசியல் கட்சிகள் அல்லது அமைப்புகள் என யார் முழு அடைப்புக்கு அழைத்தாலும் நீதிமன்றம் அனுமதிக்காது.
முக்கியமாக பொதுத்தேர்வு ஏற்கனவே திட்டமிட்டிருப்பதால் இது மாணவர்களை கடுமையாக பாதிக்கும். போராட்டக் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். அவர்கள் சட்டத்தை தங்களின் கையில் எடுத்துக் கொள்ள முடியாது." என்று கூறியுள்ளார். அதேநேரத்தில் கன்னட ஒக்கூடா அமைப்பு தலைவர் வட்டல் நாகராஜ், "மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு பெரும்பாலான இடங்களில் இருந்து ஆதரவு வந்துள்ளது." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications