அப்படிப்போடு.. இனி கன்னடத்தில் தான் எல்லாமே?.. மொழியைக் காக்க களத்தில் குதித்த கர்நாடகா டாக்டர்ஸ்
பெங்களூர்: பொதுவாக மருத்துவர்களின் கையெழுத்து என்பது யாருக்குமே புரியாத வகையில்தான் இருக்கும். அதுவும் ஆங்கிலத்தில் இருப்பதால் பலருக்கும் சுத்தமாகப் புரியாது. இந்நிலையில், கன்னட மொழியைப் பாதுகாக்கும் வகையில் கர்நாடகத்தில் உள்ள மருத்துவர்கள் பலரும் நோயாளிகளுக்கு கன்னட மொழியில் மருந்துச் சீட்டுகளை எழுதத் தொடங்கியுள்ளது அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.
கர்நாடகத்தில் கன்னட மொழியைப் பாதுகாக்கும் வகையில் ஏற்கனவே வணிக வளாகங்கள், விளம்பரப் பலகைகள் போன்றவற்றில் கன்னட மொழியில் பெயர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இந்நிலையில், கன்னட வளர்ச்சிக் கழகம் மாநில சுகாதாரத் துறைக்கு கடிதம் எழுதியிருந்தது. அந்தக் கடிதத்தில் கன்னட மொழியைப் போற்றவும், பெருமைப்படுத்தவும், கிராம மக்களும் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் மருந்துச் சீட்டுகளில் கன்னட மொழியை பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த நடைமுறையைக் கொண்டு வர உத்தரவிட வேண்டும். மருத்துவர்கள் மருந்துச் சீட்டுகளில் கன்னடத்தில் எழுத முன்வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, கர்நாடகத்தில் உள்ள மருத்துவர்கள் பலர் கன்னடத்தில் மருந்துச் சீட்டுகளை எழுதத் தொடங்கியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பலரும் இந்த செயலைப் பாராட்டி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம், சித்ருர்கா பகுதியைச் சேர்ந்த எலும்பியல் மருத்துவர் சஞ்சய் ராகவேந்திர தனது நோயாளிகளுக்கான மருந்துச் சீட்டை முழுவதுமாக கன்னடத்தில் எழுதிக் கொடுத்துள்ளார். அவர் எழுதிய மருந்துச் சீட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து எக்ஸ் தள பயனாளி ஒருவர் எழுதிய பதிவில், மருத்துவர் சஞ்சய் ராகவேந்திரா கன்னடத்தில் மருந்துகளை எழுதிக் கொடுக்கிறார். அவரைப் பிரபலப்படுத்துங்கள். கன்னடர்களாகிய நாம் இன்னும் பல சஞ்சய்களை முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல, ஹோசங்கடியில் உள்ள பல் மருத்துவர் முரளி என்பவரும் நோயாளிகளுக்கான மருந்துச் சீட்டில் கன்னட மொழியில் எழுதிக் கொடுத்து வருகிறார். கேடிஏ தலைவர் புருஷோத்தம் பிலிமல் என்பவர் அந்த மருந்துச் சீட்டை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், மருத்துவர் முரளி மோகன் கன்னடத்தில் மருந்துச் சீட்டை அழகாக எழுதியுள்ளார். அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்போம். முன்னதாக, மருத்துவர்களுக்கு கன்னடத்தில் மருந்துச் சீட்டை எழுதுவதை கட்டாயமாக்க சுகாதாரத் துறை அமைச்சர் குண்டு ராவ் நடவடிக்கை எடுக்க வேண்டும்
மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார மையங்கள், தாலுகா மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் மருந்துச் சீட்டு எழுதும்போது கன்னட மொழிக்கு முன்னுரிமை அளித்தால் அது கன்னட மொழியின் அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் அமையும். இதனைப் பரிசீலித்து கன்னடத்தில் மருந்துச் சீட்டுகள் நடைமுறையை கட்டாயமாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த மருந்துச் சீட்டுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதள வாசிகள் பலரும் மருத்துவர்களின் இந்த செயலுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இதேபோல, ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களும் கன்னட மொழியைப் பாதுகாக்கும் வகையில் கன்னடத்தைப் பயன்படுத்த அனைவரும் முன்வர வேண்டும். இது ஒரு முன்னுதாரணமான செயல் என்று மருத்துவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications