"சர்கார்" விஜய் பாணியில் ஓட்டு போட பெங்களூர் வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! ரூ1.5 லட்சம் போச்சு!
பெங்களூர்: கர்நாடகாவில் சட்டசபை தேர்தலில் வாக்களிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து பெங்களூர் வந்த 50 வயது நபருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் 65 சதவீத ஓட்டுகளுக்கு மேல் இருந்தது. 224 சட்டசபைத் தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டசபையின் பதவிக்காலம் மே 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில்தான் கடந்த 10 ஆம் தேதி சட்டசபைக்கு தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 113 தொகுதிகளை எந்த கட்சி வெல்கிறதோ அந்த கட்சியே ஆட்சி அமைக்க உரிமை கோரும். இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. ஆட்சியை யார் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
பொதுவாக தேர்தல் என்றாலே 100 சதவீத வாக்குப்பதிவு என்ற நோக்கத்தில் தேர்தல் ஆணையம் அனைவரையும் வாக்களிக்க அறிவுறுத்தும். படித்த நகர்ப்புற பகுதிகளில்தான் வாக்குப் பதிவு சதவீதம் ஒப்பீட்டு அளவில் குறைந்து காணப்படுகிறது. படித்து நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் ஒருவர் சர்கார் பட பாணியில் விஜய் போன்று அமெரிக்காவில் இருந்து கிளம்பி விமானம் மூலம் பல்லாயிரக்கணக்கான மைல்கள் கடந்து இந்தியாவுக்கு வாக்களிக்க ஆர்வமாக வந்தார், ஆனால் அவரால் வாக்களிக்க இயலவில்லை என்பதுதான் பெரும் அதிர்ச்சியாகும். கர்நாடகாவின் தாவணகெரே பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதானவர் ராகவேந்திர கமால்கர்.
இவர் 12 ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒவ்வொரு முறையும் தேர்தல் நடைபெறும் போதெல்லாம் கர்நாடகாவுக்கு வந்து வாக்களிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். கடைசியீக 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் கூட வாக்களித்துவிட்டு சென்றார். இந்த நிலையில் 2023 கர்நாடகா சட்டசபை தேர்தலில் வாக்களிக்க சுமார் 1.5 லட்சம் செலவு செய்து 14 ஆயிரம் கி.மீ. தூரம் விமானம் மூலம் ஊருக்கு வந்தார் ராகவேந்திரா.
மே 10 ஆம் தேதி தாவணகெரே தொகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு வாக்களிக்க சென்றார். ஆனால் அங்கு வாக்காளர் பட்டியலில் ராகவேந்திராவின் பெயர் இல்லை என கூறி தேர்தல் அதிகாரிகள் அவரை ஓட்டு போட அனுமதிக்கவில்லை. பட்டியலில் பெயர் விடுபட்டு போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் கூட தனது பெயர் பட்டியலில் இருக்கிறதா என ஆன்லைன் மூலம் சரிபார்த்தேன். தேர்தலில் வாக்களிக்கத்தான் ஒரு வாரம் லீவு போட்டுவிட்டு வந்தேன். எனது பெயர் ஏன் விடுபட்டுள்ளது என்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் உரிய விளக்கம் தர வேண்டும் என கோரியுள்ளார். இவரை போலவே பெண் ஒருவர் அமெரிக்காவிலிருந்து வந்து வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் சர்கார் படத்தில் வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தமிழகம் வரும் விஜய்யின் வாக்கை யாரோ பதிவு செய்துவிடுவார்கள். கள்ள ஓட்டு போட்டதை எதிர்த்து விஜய் போராடுவார். ஆனால் ராகவேந்திரா விஷயத்தில் அவர் பல கி.மீ. தாண்டி வந்தாலும் அவருடைய வாக்கை அவரால் அளிக்க முடியவில்லை.












Click it and Unblock the Notifications