ஆஹா.. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ரெட் சிக்னல் கொடுத்த பாஜக? இபிஎஸ் பிளான் என்ன?
பெங்களூர்: கர்நாடகாவில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைக்க அதிமுக விருப்பம் தெரிவித்து வந்த நிலையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளுக்கும் பாஜக வேட்பாளரை அறிவித்துள்ளது. இதனால், பாஜகவின் கூட்டணியில் போட்டியிடும் அதிமுகவின் கனவு ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டதாக பேசப்படுகிறது.
கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் மே மாதம் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி 2 கட்டங்களாக 166 தொகுதிகளுக்கும், தேவகவுடாவின் ஜேடிஎஸ் ஒரே கட்டமாக 93 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியும் 2 கட்டமாக 140 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
5% தமிழர்கள்: ஆளும் பாஜகவில் நீண்ட ஆலோசனை மற்றும் கடும் இழுபறிக்கு பிறகு வேட்பாளர் பட்டியல் நேற்று முன் தினம் வெளியானது. முதலில் 189 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், நேற்று மேலும் 23 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதுவரை மொத்தம் 212 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் 12 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
இதனிடையே, கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுகவும் ஆர்வம் காட்டியது. பாஜக கூட்டணியில் போட்டியிட அதிமுக ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி வந்த நிலயில், அதிமுக குறிவைத்த தொகுதிகளாக சொல்லப்படும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.
முன்னதாக, கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 10 தொகுதிகளில் 2 அல்லது 3-ல் போட்டியிட அதிமுக தலைமை விரும்புவதாக தகவல் வெளியாகியிருந்தது. கர்நாடகாவை பொறுத்தவரை மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 10 தொகுதிகளில் தமிழர்கள் அதிகமான அளவில் வசித்து வருகின்றனர். மொத்த வாக்கு வங்கியில் 5% தமிழர்கள் உள்ளனர்.
இதனால், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான பெங்களூர், கோலார் ஆகிய பகுதிகளில் அதிமுக தொகுதிகளை கேட்டுப்பெறலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்த நிலையில், கோலார் தொகுதியில் பாஜக வேட்பாளராக வர்தூர் பிரகாஷ், காந்தி நகர் தொகுதியில் சப்தகிரி கவுடா, பெங்களூர் சவுத் தொகுதியில் கிருஷ்ணப்பா ஆகியோரை வேட்பாளர்களாக பாஜக அறிவித்துள்ளது.

தனித்து வேட்பாளரை இறக்குமா?: தமிழர் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை அறிவித்து இருப்பதால் கூட்டணியில் போட்டியிடும் அதிமுகவின் கனவு ஏறத்தாழ முடிவுக்கு வந்து விட்டதாகவே சொல்லப்படுகிறது. கூட்டணி இல்லாத நிலையிலும் அதிமுக தங்கள் வேட்பாளர்களை தனித்து களம் இறக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இதனால், அதிமுக தனித்து வேட்பாளரை இறக்குமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
ஒருவேளை தேர்தலில் வேட்பாளரை அறிவிக்காவிட்டால் பாஜகவிற்கு ஆதரவு அளிக்கும் எனத்தெரிகிறது. வரும் 16 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் கர்நாடக தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் எனத்தெரிகிறது.
அதேபோல தேர்தல் ஆணையத்தின் முடிவை பொறுத்தும் அதிமுக நிலைப்பாடு மாற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கர்நாடக சட்டமன்றத்தேர்தலில் ஏற்கனவே சில முறை அதிமுக வென்று இருக்கிறது. கடந்த 1983, 1989, 1999 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக வென்றுள்ளது.
காந்திநகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முனியப்பா என்பவர் வெற்றி பெற்று இருக்கிறார். பெங்களூரு மாநகராட்சியில் அதிமுக சார்பில் 9 பேர் கவுன்சிலர்களாகவும் இருந்து உள்ளனர். அதேபோல், கேஜிஎப் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பக்தவச்சலம் 3 முறை வெற்றி பெற்றிருக்கிறார்.












Click it and Unblock the Notifications