வயது 90.. கையெடுத்து கும்பிடுறேன்.. என் பேரனை கைவிட்றாதீங்க.. கண்ணீர் வடித்த மாஜி பிரதமர் தேவேகவுடா
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனான நிகில் கவுடாவை வெற்றி பெற செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் மாஜி பிரதமர் தேவேகவுடா கண்ணீர் வடித்த சம்பவம் உருக்கத்தை ஏற்படுத்தியது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக இடையே ஆட்சியை பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. இருப்பினும் ஜேடிஎஸ் கட்சியை நாம் புறம்தள்ளிவிட முடியாது. ஏனென்றால் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமைந்தால் ஜேடிஎஸ் கட்சி தான் கிங்மேக்கராக மாறும்.
இந்த கட்சியை தொடங்கியவர் முன்னாள் பிரதமர் தேவேகவுடா. இவரது மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி தான் ஜேடிஎஸ் கட்சியை பொறுத்தவரை தற்போது முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். தற்போது நடைபெற உள்ள தேர்தலில் குமாரசாமி ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார்.

குமாரசாமியின் மகன் நிகில் கவுடா, ராமநகர் சட்டசபை தொகுதியில் களமிறங்கி உள்ளார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் நிகில் கவுடா மண்டியா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதையடுத்து தான் நிகில் கவுடா இந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் பேரன் நிகில் கவுடாவுக்காக முன்னாள் பிரதமர் தேவேகவுடா ராமநகர் தொகுதியில் பிரசாரம் செய்தார். சுக்கனஹள்ளி கிராமத்தில் பேரணியாக சென்று தேவேகவுடா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதையடுத்து தேவேகவுடா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது மகன் நிகில் கவுடாவை வெற்றி பெற செய்ய வேண்டும் என கண்ணீர் வடித்தார். அதாவது தேவேகவுடா, ‛‛நான் அனைத்து கிராமங்களுக்கும் சென்று வந்த பிறகு எனக்கு இந்த கிராம மக்கள் உணவு தந்தனர். நான் யாருக்காக இங்கு வந்திருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். மண்டியாவில் நிகில் குமாரசாமியை ஏமாற்றி தோற்கடித்துவிட்டனர். இன்று ராம்நகர் மக்கள் எங்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றனர். நிகில் வெற்றி பெறுவார் என நம்பிக்கை அளிக்கின்றனர்.
கர்நாடகாவில் பாஜக பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு காங்கிரஸால் வளர முடியவில்லை. ஆனால் குமாரசாமி இன்று மாநிலம் முழுவதும் பஞ்சரத்ன ரத யாத்திரை செல்கிறார். மண்டியாவில் நிகிலை தோற்கடித்து எனக்கு வலி கொடுத்தனர். இப்போது உங்கள் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டேன். தயவு செய்து அவரை ஜெயிக்க வையுங்கள். இந்த 90 வயதிலும் கூட என்னை உங்களிடம் பிரசாரம் செய்ய கூறினார். நிகில் குமாரசாமியை வெற்றி பெற செய்வது உங்கள் பொறுப்பு. ராம்நகர் மக்கள் கண்ணியமானவர்கள். என்னை வெற்றி பெற செய்து பிரதமராக்கியவர்கள்'' எனக்கூறி கண்ணீர் வடித்தார்.
ராம்நகர் சட்டசபை தொகுதி என்பது ஜேடிஎஸ் கட்சியின் கோட்டையாக உள்ளது. கடந்த 2004 சட்டசபை தேர்தல் முதல் தொடர்ந்து இங்கு ஜேடிஎஸ் கட்சியினர் வெற்றி பெற்று வருகின்றனர். குறிப்பாக கடந்த 2004, 2008, 2013, 2018 ஆகிய தேர்தல்களில் குமாரசாமி வெற்றி பெற்றார். 2018 ல் குமாரசாமி ராம்நகர், சென்னபட்டணா என 2 தொகுதிகளில் வெற்றி பெற்றார். இதையடுத்து ராம்நகர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நடந்த தேர்தலில் அவரது மனைவி அனிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் அம்மா அனிதாவுக்கு பதில் மகன் நிகில் போட்டியிடுகிறார். முன்னதாக கடந்த 1994ல் நடந்த சட்டசபை தேர்தலில் தேவேகவுடா இந்த தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications