பிரதமர் மோடியை நோக்கி செல்போன் வீசியது யார்?பின்னணியில் பாஜக பெண் தொண்டராம்! பரபர தகவல்
பெங்களூர்: மைசூரில் பிரதமர் நரேந்திர மோடி 4 கிலோமீட்டர் தூரம் பிரசார வாகனத்தில் நேற்று மாலையில் பேரணியாக சென்றார். அப்போது பிரதமர் மோடியை நோக்கி செல்போன் வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாஜகவின் பெண் நிர்வாகி போலீசாரிடம் சிக்கினார். அங்கு என்ன நடந்தது? என்பது பற்றிய முழுவிபரம் தற்போது வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபையின் 5 ஆண்டு ஆட்சிகாலம் மே 24ல் முடிவடைய உள்ளது. இந்நிலையில் தான் தற்போது அங்குள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவதில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் தான் தேர்தலி்ல வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் முனைப்பில் பாஜகவின் தலைவர்கள் கர்நாடகாவில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் . பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலையில் மைசூரில் பிரசார வாகனத்தில் 4 கிலோமீட்டர் தொலைவுக்கு பேரணி சென்றார். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு இருந்த வாகனத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக தலைவர்களுடன் ஊர்வலமாக சென்றார். மோடி மக்கள் மற்றும் தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி சென்றார். பிரதமர் நரேந்திர மோடியின் வாகனத்தின் மீது பொதுமக்கள் பூக்கள் தூவப்பட்டது.
இந்த பிரசார வாகனம் மைசூர் கேஆர் சர்க்கிள் அருகே சென்றபோது திடீரென்று செல்போன் ஒன்று பறந்து வந்தது. இந்த செல்போன் பிரதமர் மோடியின் பிரசார வாகனத்தின் மீது விழுந்தது. இதனை பிரதமர் மோடி உள்பட யாரும் எதிர்பார்க்கவில்லை. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையில் பிரதமர் நரேந்திர மோடியின் வாகனம் மீது செல்போன் வீசியது பெண் என்பதும், அவர் பாஜகவில் செயல்பட்டு வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதுபற்றி கர்நாடகா மாநில ஏடிஜிபி அலோக் குமார் கூறுகையில், ‛‛பிரதமர் வாகனத்தின் மீது செல்போன் வீசிய நபர் எந்த தவறான நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. அவர் பாஜகவை சேர்ந்தவர். பிரதமர் மோடியை பார்த்த உற்சாகத்தில் அவர் இருந்த நிலையில் செல்போன் விழுந்து. இந்த சமயத்தில் பிரதமர் மோடி எஸ்பிஜி பாதுகாப்பில் இருந்தார். இதையடுத்து அவரிடம் விசாரித்து செல்போனை எஸ்பிஜி அவரிடமே ஒப்படைத்தது. இருப்பினும் நாளை காலை விசாரணைக்கு வரும்படி கூறியுள்ளோம்'' என்றார்.
இதற்கிடையே தான் பிரதமர் மோடியை பார்த்த உற்சாகத்தில் அவர் மீது மலர்தூவும்போது அந்த பெண்ணின் கையில் இருந்து செல்போன் தவறி பறந்து வந்து விழுந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி கேரளா மாநிலம் கொச்சியில் ஊர்வலம் சென்றார். அப்போதும் பிரதமர் மோடிக்கு மலர்தூவும்போது ஒருவரின் செல்போன் பறந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications