கர்நாடகாவில் கணவரை கொன்ற அரசு பள்ளி ஆசிரியைக்கு தூக்கு தண்டனை.. கள்ளக்காதலனுக்கும் மரண தண்டனை
பெங்களூர்: கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சொரப் டவுன் பகுதியைச் சேர்ந்த இம்தியாஸ் என்பவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் காதல் திருமணம் செய்த கணவனை, பெண் ஆசிரியை தவறான பழக்கத்தால் தீர்த்துக்கட்டினார். அவருக்கும், அவரது கள்ளக்காதலனுக்கும் தூக்குத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கள்ளக்காதல் எப்படிப்பட்ட குடும்பத்தையும் ஒன்றுமில்லாமல் செய்துவிடுகிறது. ஒரு குடும்பத்தையே கர்நாடகாவில் காலி செய்திருக்கிறது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம். கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சொரப் டவுன் பகுதியைச் சேர்ந்த இம்தியாஸ் என்பவர் கர்நாடகாவின் கலபுரகியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அப்போது அங்கு ஆசிரியையாக பணியாற்றி வந்த லட்சுமி என்ற பெண்ணை காதலித்தார். இவர்களது காதலுக்கு இரு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் எதிர்ப்பை மீறி இம்தியாஸ், லட்சுமியை பதிவுத்திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் இடமாற்றம் புயலாக மாறியது. இம்தியாஸ் மற்றொரு பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதேபோல் லட்சுமியும் பணி இடமாறுதல் பெற்று வந்தார்.
அதையடுத்து இம்தியாஸ், தனது மனைவி லட்சுமி மற்றும் மகனுடன் பத்ராவதி டவுன் பகுதியில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் ஆசிரியை லட்சுமிக்கும் அவரது பள்ளிக்கூட தோழன் டிரைவர் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் இடையே அங்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தார்களாம். கணவர் இல்லாத நேரத்தில் கிருஷ்ணமூர்த்தியை தன்னுடைய வீட்டுக்கே வரவழைத்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதை பார்த்த லட்சுமியின் மகன் தனது தந்தை இம்தியாசிடம் கூறியிருக்கிறான். அதையடுத்து இம்தியாஸ், தனது மனைவி லட்சுமியை அழைத்து கண்டித்தார். இருப்பினும் லட்சுமி அதை கேட்கவில்லை.
இதற்கிடையே கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந் தேதி அன்று இரவு இம்தியாசுக்கும், லட்சுமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமி, தனது கள்ளக்காதலன் கிருஷ்ணமூர்த்தியை செல்போனில் தொடர்பு கொண்டு இம்தியாசை கொலை செய்ய வீட்டுக்கு வரும்படி அழைத்தாராம். அதன்பேரில் கிருஷ்ணமூர்த்தி, தனது நண்பர் சிவராஜ் என்பவருடன் லட்சுமியின் வீட்டுக்கு சென்றார். பின்னர் லட்சுமி, அவரது கள்ளக்காதலன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவருடைய நண்பர் சிவராஜ் ஆகிய 3 பேரும் சேர்ந்து இரும்பு கம்பியால் தாக்கி இம்தியாசை படுகொலை செய்தனர். பின்னர் அவரது உடலை ஆட்டோவில் கொண்டு சென்று பத்ரா கால்வாயில் வீசியிருக்கிறார்கள்.
இகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து லட்சுமி, அவரது கள்ளக்காதலன் கிருஷ்ணமூர்த்தி, அவருடைய நண்பர் சிவராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது பத்ராவதி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கடந்த 9 ஆண்டுகளாக விசாரணை நடந்தது. விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி இந்திரா மயில்சாமி செட்டியார் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். இதன்படி வழக்கில் குற்றவாளிகளான லட்சுமிக்கும், அவரது கள்ளக்காதலன் கிருஷ்ணமூர்த்திக்கும் மரண தண்டனையும், சாட்சியை அழிக்க உதவிய சிவராஜுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications