பெங்களூரில் பைக் டாக்ஸிக்கு தடை.. ஐடி ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கர்நாடக அரசு
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முக்கியப் போக்குவரத்தாக இருந்து வந்த பைக் டாக்ஸிக்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் ஐடி ஊழியர்கள் பெரும்பாலும் பைக் டாக்ஸியையே நம்பியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஓலா, ரேபிடோ, ஊபர் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் மூலம் பைக் டாக்ஸி சேவை வழங்கப்பட்டு வருகிறது. டெக் சிட்டி, ஐடி தலைநகரம், ஸ்டார்ட் அப்புகளின் தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூரில் மட்டும் பதிவு செய்யப்பட்ட சுமார். 1.20 லட்சம் பைக் டாக்ஸிகள் இயங்கி வருகின்றன.

பெங்களூரில் அதிக அளவிலான ஐடி நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வந்து இங்கு தங்கி லட்சக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர். பெங்களூரைப் பொருத்தவரை முக்கியப் பிரச்சனையாக இருப்பது போக்குவரத்து நெரிசல்தான். இந்தப் போக்குவரத்தை சமாளித்து அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்பது பெரும் டாஸ்குதான்.
அந்த வகையில், ஐடி துறையினருக்கு பைக் டாக்ஸி பெரும் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். குறைந்த செலவு, விரைவான சேவை போன்றவற்றால் பெரும்பாலும் பைக் டாக்ஸி சேவையையே பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். ஒரு பக்கம் இது வரப்பிரசாதமாக இருந்தாலும், பைக் டாக்ஸிகளில் செல்லும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வந்தன.
மேலும், பைக் டாக்ஸிக்களால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பைக் டாக்ஸிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனாலும், கடந்த 2021 ஆம் ஆண்டில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பைக் டாக்ஸிக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியது. இருப்பினும், பைக் டாக்ஸியில் பயணம் செய்த பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டது.
தொடர் பாலியல் துன்புறுத்தல், பைக் டாக்ஸி சேவையை தவறாகப் பயன்படுத்துவது போன்ற காரணத்தால் கடந்த ஆண்டு இந்த சேவைக்கு வழங்கிய அனுமதியை கர்நாடக அரசு திரும்பப் பெற்றது. இதையடுத்து இந்த பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, பைக் டாக்ஸி நிறுவனங்கள் கர்நாடக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரி வழக்கு தொடர்ந்தன.
இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம் கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்ய மறுத்துவிட்டது. மேலும், ஜூன் 16 ஆம் தேதி முதல் கர்நாடகத்தில் பைக் டாக்ஸி சேவையை நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்ஸி சேவை முடிவுக்கு வந்துள்ளது. இதனால், பெங்களூரில் பைக் டாக்ஸியை நம்பியிருந்த 1.20 லட்சம் ஓட்டுநர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.
குறிப்பாக, ஐடி துறையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பைக் டாக்ஸியை அனுமதிப்பது தொடர்பான விதிமுறைகளை விரைவில் கொண்டு வர வேண்டும் என்று நாஸ்காம் நாஸ்காம் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், அரசின் உத்தரவை மீறி பெங்களூரில் இயக்கப்படும் பைக் டாக்ஸிகளை பறிமுதல் செய்யும் பணியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
யஷ்வந்தபுரம், ராஜாஜி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, தடையை மீறி இயக்கப்பட்ட வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். நேற்று மட்டும் யஷ்வந்தபுரம், ராஜாஜி நகர் சுற்று வட்டாரப் பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப் பதியப்பட்டுள்ளது. பெங்களூரு முழுவதும் 103 பைக் டாக்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications