கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை திடீரென உயர்வு.. லிட்டருக்கு ரூ.3 வரை உயர்கிறது! என்ன காரணம்
பெங்களூர்: கர்நாடக மாநில அரசு கலால் வரியை உயர்த்தியதால் அம்மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது. பெட்ரோல், டீசல் விலை ரூ. 3 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்துவதாகக் கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.

விலை உயர்வு: இதனால் கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாகக் கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கர்நாடகா மாநிலத்தில் பெட்ரோல் மீதான கலால் வரி 25.92 சதவீதத்தில் இருந்து 29.84 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல டீசல் மீதான கலால் வரி 14.3 சதவீதத்தில் இருந்து 18.4 சதவீதமாக உயர்த்தப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய வரி உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்படுகிறது.
எவ்வளவு உயர்கிறது: கர்நாடக தலைநகர் பெங்களூரில் வரி உயர்வு அறிவிப்பிற்கு முன்பு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.99.84ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.85.93 ஆகவும் விற்கப்பட்டது. இப்போது வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3, டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.50 உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதற்காக வரி உயர்வு: லோக்சபா தேர்தல் சமீபத்தில் தான் முடிந்த நிலையில், இந்த விலை ஏற்றம் அமலுக்கு வருகிறது. கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் ஐந்து முக்கிய வாக்குறுதிகளை அறிவித்து இருந்தது. அதை நிறைவேற்ற இப்போது அம்மாநில அரசுக்குக் கூடுதலாக ரூ.50,000 கோடி முதல் ரூ.60,000 கோடி வரை செலவிட வேண்டியுள்ளது.
இந்த வரி உயர்வின் மூலம் இந்த நிதியாண்டில் மாநில அரசுக்குக் கூடுதலாக ரூ.2,500 முதல் ரூ.2,800 கோடி வரை கிடைக்கும் என அம்மாநில நிதித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த மார்ச் 14 முதல் ஜூன் 4 வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நிலையில், வரி வருவாய் குறைந்தது. கர்நாடகாவில் நிதி இலாகா முதல்வர் சித்தராமையா வசம் இருக்கும் நிலையில், இது தொடர்பாக ஆய்வுக் கூட்டத்தையும் அவர் சமீபத்தில் தான் நடத்தி இருந்தார்.வருவாய் வசூல் இலக்குகளை எட்டுமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கர்நாடக அரசு நடவடிக்கை: கர்நாடக அரசு வரி வருவாயை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் தான் அம்மாநில அரசு சொத்துக்களின் வழிகாட்டுதல் மதிப்பை 15-30 சதவிகிதம் உயர்த்தியுள்ளது.. அதேபோல மதுபானங்களுக்குக் கூடுதல் கலால் வரியையும் 20 சதவிகிதம் வரை உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்குக் கூடுதலாக 3 சதவீதம் செஸ் வரியை விதித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல 25 லட்சத்துக்கும் அதிகமான எலக்ட்ரிக் வாகனங்கள் தனியாக வரியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
கர்நாடக தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் தந்து வாக்குறுதிகள்: ஏசி இல்லாத அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணிக்கலாம்.. மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம்.. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000.. வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் 10 கிலோ உணவு தானியங்கள்.. வேலையில்லா பட்டதாரிகளுக்கு நிதியுதவி ஆகியவை காங்கிரஸ் அறிவித்த வாக்குறுதிகள் ஆகும்.












Click it and Unblock the Notifications