ஹிஜாப் விவகாரம்.. கர்நாடகாவில் +1, +2 வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கு புதன் வரை விடுமுறை
பெங்களூர்: கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தில் இன்னும் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்காத நிலையில், +1, +2 வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்குப் புதன் வரை விடுமுறை விடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலும் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் உடை அணிந்து வர எதிர்ப்பு கிளம்பியது. உடுப்பி, மங்களூர், சிக்மங்களூர், சிவமொக்கா மாவட்டங்களில் ஹிஜாப் விவகாரம் பூதாகரமாகியுள்ளது.
அங்குள்ள பல பியூ கல்லூரிகளும் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டது. கல்லூரிகளின் இந்த உத்தரவை எதிர்த்து இஸ்லாமியப் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் முஸ்லீம் மற்றும் இந்துத்துவ மாணவர்களுக்கு இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதன் காரணமாகப் பதற்றத்தைத் தணிக்க அங்குக் கடந்த 4 நாட்களாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்த வழக்கில் ஹிஜாப், காவி உடை என எதையும் கல்வி நிலையங்களுக்கு அணிந்து வரக்கூடாது என்று கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிட்டது.
ஏற்கனவே, கர்நாடகாவில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு வரும் திங்கள்கிழமை முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதர வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது +1, +2 வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கு வரும் புதன்கிழமை வரை விடுமுறை விடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஹிஜாப் தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை விசாரிக்கும் நிலையில், கர்நாடக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications