மனிதர்களை சமமாக கருதாத எந்த மதமும் நோய்தான் - உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சுக்கு கார்கே மகன் ஆதரவு
பெங்களூர்: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மகன் பிரியங்க் கார்கே.
சென்னையில் தமிழ்நாடு அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில், கலந்துகொண்டு பேசிய அவர் சனாதனத்தை கடுமையாக விமர்சித்து பேசினார்.

ட்விட்டரில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் இன்று கலந்து கொண்ட போது, இந்திய விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸின் பங்களிப்பு என்ற புத்தகத்தை வெளியிடக் கேட்டுக் கொண்டார்கள். விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ் எந்த பங்களிப்பும் செய்யாத நிலையில், மிகப்பெரிய அளவில் இருந்த அந்தப் புத்தகத்தை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது.
அப்படி என்னதான் பங்களிப்பு செய்தார்கள் என்று திறந்து பார்த்தோம். முதல் பக்கத்திலேயே ஆங்கிலேயர் காலணியை நாவால் வருடுகிற புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அடுத்து காந்தியார் கொலையை குறிக்கின்ற வகையிலான சித்திரம் வந்தது. அடுத்தடுத்த பக்கங்கள் அனைத்தும் காலியாக இருந்தன. ஏனென்று கேட்ட போது, நீங்களும் அந்த வரலாற்றை நிரப்பலாம் என்று கையில் பேனாவைத் தந்தார்கள். மூன்று பெரிய பூஜ்ஜியங்களை வரைந்தோம்.
இப்படிப்பட்ட பூஜ்ய வரலாற்றைக் கொண்ட சனாதனவாதிகளை மக்களிடம் அம்பலப்படுத்திய த.மு.எ.க.ச தோழர்களுக்கு வாழ்த்துகள். தேர்தல் களத்தில் பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி சனாதனத்தை ஒழிப்போம்." என்று குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் அந்த மாநாட்டில் உதயநிதி பேசும்போது, "சனாதானம் என்பது கொசு, டெங்கு, புளூ, மலேரியா போன்ற நோய். அதை அழிக்க வேண்டும்." என பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இனப்படுகொலைக்கு உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்ததாக செய்திகள் பரப்பப்பட்டன. இது தொடர்பாக அவர் மீது காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டன. குறிப்பாக மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், இந்துத்துவ அமைப்பினர், மடாதிபதிகள் என பலர் இதனை கண்டித்து பேட்டியளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கேவும் இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்து இருக்கிறார். அதில், "சமத்துவத்தை போதிக்காத எந்த மதமும் மதம் கிடையாது. எனக்கு சம உரிமை அளிக்காத, மனிதனை மனிதனாக மதிக்காத, நடத்தாத எந்த மதமும் நோயைப் போன்றதுதான்" என்றார்.












Click it and Unblock the Notifications