கர்நாடகா பாஜகவுக்கு காத்திருக்கும் ஷாக்..5 எம்.எல்.ஏக்களுடன் கட்சியை விட்டு தப்பி ஓடுகிறார் சோமண்ணா?
பெங்களூர்: கர்நாடகா மாநில பாஜக தலைவராக எடியூரப்பா மகன் விஜயேந்திரா, எதிர்க்கட்சித் தலைவராக அசோக் நியமிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் முன்னாள் அமைச்சர் சோமண்ணா. பாஜகவின் 5 எம்.எல்.ஏக்களுடன் பாஜகவில் இருந்து சோமண்ணா விலகக் கூடும் என்ற நிலையில் டெல்லி மேலிடம் இறுதி கட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு சோமண்ணாவை அழைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவடைந்து 7 மாதங்களாகிறது. அடுத்த 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களும் முடிவடைந்து டிசம்பர் 3-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில் மிக நீண்ட இழுபறிக்குப் பின்னரே கர்நாடகா மாநில பாஜக தலைவராக எடியூரப்பா மகன் விஜயேந்திரா, கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவராக அசோக் ஆகியோரை அக்கட்சி மேலிடம் நியமித்திருந்தது. ஆனால் இதற்கு கர்நாடகா பாஜகவில் கடும் எதிர்ப்பு உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

கர்நாடகா முன்னாள் அமைச்சர் சோமண்ணாவும் அவரது ஆதரவு 5 எம்.எல்.ஏக்களும்தான் இப்போது கடுமையான அதிருப்திக் குரலை எழுப்புகின்றனர். தமக்கு இந்த இரு பதவிகளில் ஒன்று கிடைக்கும் என்று எதிர்பார்ப்புடன் இருந்த சோமண்ணா போர்க்கொடி தூக்கி வருகிறார். தும்கூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சோமண்ணா, பாஜக மேலிடம் கேட்டுக் கொண்டதாலேயே என் தொகுதியை விட்டு வேறு தொகுதியில் நான் போட்டியிட்டேன். அதுதான் நான் செய்த பெரும் குற்றம். மத்திய அமைச்சர் அமித்ஷா என் வீட்டில் 2,3 மணிநேரம் அமர்ந்து கொண்டு நான் வேறு தொகுதியில் போட்டியிட்டுத்தான் ஆக வேண்டும் என வலியுறுத்தினார். ஆனாலும் முடியாது என்றேன். அப்போது டெல்லிக்கு வரவழைத்தும் கட்டாயப்படுத்தி வேறு தொகுதியில் போட்டியிட வைத்தனர். என் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டிசம்பர் 7-ந் தேதி டெல்லிக்கு செல்கிறேன். என் வேதனை, வலியை டெல்லி மேலிடத்திடம் தெரிவிப்பேன். டெல்லி பயணத்துக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிப்பேன் என்றார் விரக்தி.
இதனிடையே சோமண்ணாவை சமாதானப்படுத்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால் எடியூரப்பாவின் போனை சோமண்ணா கட் செய்துவிடுகிறாராம். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, சோமண்ணாவை சமாதானப்படுத்த தொடர்ந்து முயற்சிக்கிறேன். ஆனால் சோமண்ணா என்னிடம் பேசவே மறுக்கிறாரே.. நான் என்னதான் செய்வது என்கிறாராம். இதனால் கர்நாடகா பாஜகவும் டெல்லி மேலிடமும் சோமண்ணாவின் முடிவு என்னவாக இருக்கும் என திக் திக் திகிலில் உள்ளதாம்.












Click it and Unblock the Notifications