'சென்சிட்டிவ்' ஷிவமொக்காவுக்கு.. பறந்து வரும் மோகன் பகவத்.. கர்நாடகா போலீஸ் உச்சகட்ட 'அலர்ட்'
பெங்களூர்: பதற்றம் நிறைந்த பகுதியாக இருக்கும் ஷிவமொக்காவுக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று வருகை தரவுள்ளதை ஒட்டி, அங்கு போலீஸார் உச்சக்கட்ட 'அலர்ட் மோடு'க்கு மாறியுள்ளனர்.
ஷிவமொக்கா முழுவதும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, அங்கு ஆயிரணக்கணக்கான போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, ஏதேனும் அசம்பாவித சதித்திட்டங்கள் தீட்டப்படுகிறதா என்பதை அறிய, உளவுப்பிரிவு போலீஸார் அங்கு மாறுவேடத்திலும் சுற்றி வருவதாக கூறப்படுகிறது.

அதிகரிக்கும் மத மோதல்கள்
பொதுவாக, இந்தியாவில் மத ரீதியாலான மோதல்களும், கலவரங்களும் வட மாநிலங்களில்தான் அதிகம் நடைபெறும். ஆனால், சமீபகாலமாக அந்த வரலாற்றை மாற்றி எழுதி வருகிறது கர்நாடகா. தென் மாநிலங்ளில் மதம் சார்ந்த வெறுப்பு பேச்சுகளும், மோதல்களும் அதிகம் நிகழும் மாநிலமாக கர்நாடகா மாறி வருவது அனைவரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது. அதிலும் குறிப்பாக, கர்நாடகாவின் ஷிவமொக்கா, மங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இதுபோன்ற சம்பவங்களை அதிகம் பார்க்க முடிகிறது.

பற்ற வைத்த பிரக்யா சிங்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட, ஷிவமொக்காவில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளும், முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்தவர்களும் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இதனால் ஷிவமொக்கா பதற்றம் நிறைந்த பகுதியாக மாறியிருக்கிறது. இந்த சூழலில், ஷிவமொக்காவுக்கு கடந்த வாரம் வந்திருந்த பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குர், இந்துக்கள் தங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருக்குமாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகாரின் பேரில் தற்போது பிரக்யா சிங் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வருகை தரும் மோகன் பகவத்
பிரக்யா சிங்கின் இந்தப் பேச்சால் ஷிவமொக்கா மாவட்டத்தில் ஒருவிதமான பதற்றமான சூழல் எழுந்துள்ளதாக தெரிகிறது. பிரக்யாவின் கருத்தை மையமாக வைத்து குறிப்பிட்ட இரு மதத்தினர் இடையே சமூக வலைதளங்களில் வாக்குவாதங்களும் ஏற்பட்டு வருவதாக உளவுப்பிரிவு போலீஸார் தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற சூழலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஷிவமொக்காவுக்கு இன்று வருகை தரவுள்ளார்.

போலீஸ் உச்சக்கட்ட 'அலர்ட்'
ஷிவமொக்காவில் மூன்று நாட்கள் நடைபெறும் ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் மோகன் பகவத் கலந்துகொள்ள இருக்கிறார். இதில் நூற்றுக்கணக்கான ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்கின்றனர். இதனையொட்டி, ஷிவமொக்கா மாவட்டம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக இரு தினங்களாக அங்கு போலீஸார் தீவிர கண்காணிப்பிலும், வாகனத் தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். சதித்திட்டம் ஏதும் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க மாறுவேடத்தில் உளவுப்பிரிவு போலீஸார் மாவட்டம் முழுவதும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications