கோவை, மங்களூர் குண்டு வெடிப்பு பயங்கரவாதிகள் கை வரிசைதானா பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே 'சம்பவம்'?
பெங்களூர்: கோவை கார் குண்டு வெடிப்பு, கர்நாடகா மாநிலம் மங்களூர் ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு ஆகியவற்றை நிகழ்த்திய பயங்கரவாதிகள்தான் பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே இரட்டை வெடிகுண்டு சம்பவத்துக்கும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
தமிழ்நாட்டின் கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு கார் ஒன்று வெடித்து சிதறியது. காரில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்தே இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த விசாரணையில் முபின் என்பவர் காரில் வெடிகுண்டை வெடிக்கச் செய்தது அம்பலமானது. இது ஒட்டுமொத்த நாட்டையுமே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக 15-க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கர்நாடகா மாநிலம் மங்களூரில் 2022-ம் ஆண்டு ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஷாரிக் என்பவர் தீக்காயங்களுடன் சிக்கினார். ஷாரிக் தற்போது பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தற்போது பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில் இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இதில் 10 பேர் படுகாயமடைந்தனர். தற்போது இந்த 3 குண்டு வெடிப்புகளிலும் ஈடுபட்டது ஒரே கும்பலா? என்கிற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
கோவை சம்பவத்தின் போதும் கர்நாடகாவில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மங்களூர் குண்டு வெடிப்பில் சிக்கிய ஷாரிக், கோவை முகவரிகளை பயன்படுத்தி போலி அடையாள அட்டைகளைப் பெற்றதும் கோவைக்கு வந்து சென்றதும் தெரியவந்தது. அத்துடன் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவமும் மங்களூர் குண்டு வெடிப்பும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் போலீசார் கூறுகின்றனர். இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் ஒரே மாதிரியாக வெடி பொருட்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டிருப்பதும் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கோவை, மங்களூர், பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் ஒரே பயங்கரவாத கும்பலைச் சேர்ந்தவர்களா? லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நேரத்தில் மிகப் பெரிய நாசவேலைக்கு ஏதேனும் முன்னோட்டமாக இந்த சம்பவங்களை நிகழ்த்தினாரா? என்ற கோணங்களிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications