ராஜினாமா மீது முடிவெடுக்க காலம் தாழ்த்தும் சபாநாயகர்.. அதிருப்தி எம்எல்ஏ-க்கள் இப்படி செய்வார்களா?
பெங்களூரு: கர்நாடகாவில் எம்எல்ஏ-க்களின் ராஜினாமா குறித்து முடிவெடுக்க கால அவகாசம் வேண்டும் என கர்நாடக சபாநாயகர் கூறியுள்ள நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் நள்ளிரவில் உச்சநீதிமன்ற படி ஏறவும் வாய்ப்பு உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி கூட்டணி ஆட்சி மீது 10 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் இன்று மாலை சபாநாயகர் ரமேஷ் குமாரை கர்நாடக தலைமைச் செயலகத்தில் சந்தித்து ராஜினாமா கடிதங்களை கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் ரமேஷ் குமார், எம்எல்ஏ-க்கள் ராஜினாமா கடிதம் மீது மின்னல் வேகத்தில் எல்லாம் முடிவெடுக்க முடியாது. ராஜினாமா குறித்து விளக்கம் அளிக்குமாறு, எம்எல்ஏக்களுக்கு முறையாக சந்தர்ப்பம் வழங்கினேன். ஆனால் அவர்களோ அதையெல்லாம் ஏற்காமல் அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர் என குறிப்பிட்டார்.
உங்க காலுக்கு ஒரு கும்பிடு.. நிம்மதியாக சாக விடுங்கள்! பிரஸ் மீட்டில் உருகிய கர்நாடக சபாநாயகர்
உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மீண்டும் புதிதாக ராஜினாமா கடிதங்களை கொடுத்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் ராஜினாமா முடிவு மீது முடிவெடுக்க, தனக்கு கால அவகாசம் வேண்டும் என கோரி சபாநாயகர் ரமேஷ் குமார் தாக்கல் செய்து மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரிக்கப்பட உள்ளது.
ஆனால் அதிருப்தி எம்எல்ஏ-க்களோ தங்களது கடிதம் மீது துரிதமாக முடிவெடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அரசியல் நிபுணர்களின் கூற்றுப்படி ஆபரேஷன் தாமரை திட்டப்படி, விரைவில் கர்நாடகாவில் பாஜக ஆட்சியை அமைக்க ஏதுவாக குமாரசாமி அரசு கவிழ்க்கப்பட வேண்டும் என்பதே அதிருப்தி எம்எல்ஏக்களின் இலக்காக உள்ளது.
இந்நிலையில் சபாநாயகர் இரவுக்குள் தங்களது ராஜினாமா கடிதங்கள் மீது முடிவெடுக்காவிட்டால், நள்ளிரவுக்குள் உச்சநீதிமன்றத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் சார்பான மனு தாக்கல் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளதாக கூறப்படுகிறது.
நீங்கள் உத்தரவிட்டபடி நாங்கள் புதிதாக ராஜினாமா கடிதங்களை சபாநாயகரிடம் அளித்து விட்டோம். ஆனால் அவர் காலம் தாழ்த்தி தான் முடிவெடுப்பேன், இரவு முழுவதும் யோசிப்பேன் என கூறியுள்ளார். எனவே எங்களது ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் விரைந்து முடிவெடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூட அதிருப்தி எம்எல்ஏக்கள் கோரலாம்.
கடந்த சில நாட்களாக மிக விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் கர்நாடக அரசியல் களம், எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற த்ரில்லர் நிலைக்கு வந்துள்ளது. நள்ளிரவுக்குள் கர்நாடக கூட்டணி அரசு மீது அதிருப்தியில் உள்ள எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தை நாடுவார்களா என்பது சஸ்பென்ஸாக உள்ளது.