விரைவில் அரசியலில் நுழையும் நடிகர் கிச்சா சுதீப்? காங்கிரஸா.. பாஜகவா? அவரே சொன்ன பதில பாருங்க! ஆஹா
கன்னட நடிகர் கிச்சா சுதீப்பை அரசியலில் இழுக்க காங்கிரஸ், பாஜக கட்சிகள் போட்டி போடும் நிலையில் அவர் ரசிகர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் நடிகர் கிச்சா சுதீப்பை காங்கிரஸ், பாஜக கட்சியினர் இழுக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் தனது அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் கிச்சா சுதீப் வெளிப்படையாக முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டை போல் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் நிறைய நடிகர்கள் அரசியலில் கால்பதித்துள்ளனர். இருப்பினும் தமிழ்நாடு அளவுக்கு நடிகர்கள் கட்சி துவங்கியது இல்லை.
மாறாக கன்னட நடிகர் உபேந்திரா உத்தம பிரஜாக்யா எனும் கட்சியை துவக்கியுள்ளார். இவர் நடிகர் விஷால் நடித்த சத்யம் திரைப்படத்தில் ‛மாணிக்கவேல்' எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

கர்நாடக அரசியலில் நடிகர்கள்
உபேந்திராவை தவிர பிற நடிகர், நடிகைகள் பாஜக, காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். மறைந்த நடிகர் அம்பரிஷ் காங்கிரஸில் அமைச்சராக இருந்தார். அவரது மனைவியும் நடிகையுமான சுமலதா மண்டியா எம்பியாக உள்ளார். நடிகை ரம்யா காங்கிரஸில் எம்பியாக இருந்தார். தமிழில் வெளியான ‛பாட்ஷா' படத்தில் ரஜினிக்கு தம்பியாக நடித்த சசிக்குமார் சித்ரதுர்கா தொகுதி எம்பியாக இருந்துள்ளார். நடிகர் ஜக்கேஷ் பாஜகவில் எம்பியாக இருந்து வருகிறார். நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூர் சென்ட்ரல் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். பிசி பாட்டீல் விவசாயத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

சுதீப் பிரசாரம்
இதுதவிர பல நடிகர்கள் தேர்தல் சமயங்களில் மட்டும் நட்பு மற்றும் பழக்க வழக்கங்களின் அடிப்படையில் வேட்பாளர்களுக்கு பிரசரம் செய்து வருகின்றனர. அதன்படி கர்நாடக திரையுலகில் முன்னணி நடிகர்களாக உள்ள தர்ஷன், கேஜிஎப் புகழ் யாஷ், கிச்சா சுதீப் ஆகியோர் முந்தைய தேர்தல்களில் கட்சி பாகுபாடு இன்றி நட்பின் அடிப்படையில் பிரசாரம் செய்துள்ளனர்.

சுதீப்புக்கு குறிவைக்கும் கட்சிகள்
இந்நிலையில் தான் விரைவில் கர்நாடகா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நடிகர் சுதீப்பை காங்கிரஸ் கட்சியில் இணைக்க முயற்சி நடப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் பாஜகவிலும் அவரை இழுப்பதற்கான மறைமுக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாரை கிச்சா சுதீப் சந்தித்தார். அதேபோல் முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் கிச்சா சுதீப் சந்தித்தார். இந்த சந்திப்புகள் விவாதத்தை ஏற்படுத்தியது. மேலும் பிரதமர் நரேந்திர மோடியும் கூட சமீபத்தில் கன்னட நடிகர்களை சந்தித்து டின்னர் வழங்கியபோது சுதீப்புக்கும் அழைப்பு விடுத்தார். ஆனால் உடல்நலக்குறைவால் அவர் பங்கேற்கவில்லை. இதுவும் யூகங்களை கிளப்பிவிட்டது.

அரசியலில் நுழைகிறேனா?
இருப்பினும் சுதீப் அரசியல் தொடர்பாக எதையும் வெளிப்படையாக தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்த நிலையில் தற்போது சில விஷயங்களை அவர் பொதுவெளியில் பேசியுள்ளார். இதுபற்றி நடிகர் சுதீப் கூறியதாவது: எனக்கு அரசியல் கட்சிகளிடம் இருந்து அழைப்பு வருகிறது. இன்னும் அதுபற்றி நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. டிகே சிவக்குமார், முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர் சுதாகர் ஆகியோரை சந்தித்து பேசினேன். அனைவருடனும் எனக்கு நல்லுறவு உள்ளது. ஆனால் எனது அரசியல் பிரவேசம் குறித்து நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. முடிவெடுத்ததும் வெளியிடுவேன்.

ரசிகர்களுடன் ஆலோசனை
மேலும் நான் அரசியலுக்கு வருவதை பற்றி எனது ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். இது எனக்கு மிக முக்கியமான அம்சம். அவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். மேலும் அரசியலில் இல்லாமல் கூட சேவை செய்ய முடியும் எனும்போது அரசியலுக்கு ஏன் வரவேண்டும் என்பதை யோசிக்க வேண்டும். இந்த விஷயத்தில் முதலில் நான் ஒரு தீர்வை எட்ட வேண்டும். அரசியலில் இறங்க வேண்டுமா? இல்லாவிட்டால் இப்போது போன்று தனிப்பட்ட முறையில் செயல்பட முடியுமா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகு இதுபற்றி நிச்சயம் அறிவிப்பேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications