லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகன் நிலைமையை பாருங்க.. கை, கால் செயலிழப்பு.. பேச்சும் போச்சு
பெங்களூர்: தமிழகத்தையே உலுக்கிய லலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட கொள்ளையன் முருகன் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. பெங்களூர் சிறையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
2019ஆம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதியை தமிழகம் மறக்கமுடியாது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி கடையில் மிகப்பெரிய கொள்ளை சம்பவம் ஒன்று அன்றைய தினம் நள்ளிரவில் அரங்கேறியது.
லலிதா ஜுவல்லரி கடை பின்புற சுவரில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு ஓட்டை போட்டு கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து, பல கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர். கடையை சுற்றி ஆறு பாதுகாவலர்கள் இரவு பணியில் இருந்த போதிலும் அவர்கள் அனைவர் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு காவல்துறையினரிடம் சிக்காமல் அசால்டாக கொள்ளை நடத்தி தப்பினர்.

போலீஸ் அபாரம்
ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான தமிழக காவல்துறை அவ்வளவு எளிதாக விட்டுவிடவில்லை. எந்த துப்பும் கிடைக்காவிட்டாலும், தீவிர விசாரணையில் மூலம், இந்த சம்பவத்தில் தொடர்புடைய திருவாரூரைச் சேர்ந்த மணிகண்டன் அவரது கூட்டாளி சுரேஷின் தாய் கனகவல்லி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4.8 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நீதிமன்றத்தில் சரண்
இவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த கொள்ளையின் மூளையாக செயல்பட்டது முருகன் என்பது தெரியவந்தது. ஆனால், அவர் காவல்துறை கையில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்தார். காவல்துறை நெருங்கி வருவதை அறிந்ததும் பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

நடிகைகளுடன் உல்லாசம்
இவர் மீது கர்நாடகாவிலும் கொள்ளை வழக்குகள் இருப்பதால் அந்த மாநில காவல்துறையினர் விசாரணையை ஆரம்பித்தனர். காவிரிப்படுகையில், நகை கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையின் போது பல்வேறு, சினிமா துணை நடிகைகளுடன் இவர் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது.

பக்க வாதம்
இப்படியாக, கொள்ளை, நடிகைகளிடம் உல்லாசம் என்று மனம் போன போக்கில் வாழ்ந்து வந்த முருகன், தற்போது பெங்களூர் சிறைச்சாலையில், கை, கால் செயல் இழந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு அவர் இந்த நிலைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஜாமீன் முயற்சி
எனவே மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பார்ப்பதற்கு வசதியாக முருகனை ஜாமீனில் எடுப்பதற்காக, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் முயற்சியில் அவர் தரப்பு வக்கீல்கள் உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கொள்ளைச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு கூட முடிவடையாத நிலையில், அந்த கொள்ளையின் மூளையாக இருந்தவர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, கை, கால் செயல் இழந்து, பேச முடியாத நிலைமைக்கு போயுள்ளார். கொள்ளையடித்த பணத்தை வைத்து அவரால் நிம்மதியான வாழ்க்கையை நடத்த முடியவில்லை என்பது இதில் கிடைத்த பாடம் என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.












Click it and Unblock the Notifications