‛நானும் எம்எல்ஏ தான்யா’.. கர்நாடகா சட்டசபையை களேபரமாக்கிய நபர்! டிகே சிவக்குமாருக்கு ‛வாழ்த்து’ வேற!
பெங்களூர்: கர்நாடகாவில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேளையில் நானும் எம்எல்ஏ தான் என சட்டசபைக்குள் நுழைந்த நபர் துணை முதல்வர் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து மாஸ் காட்டி, களேபரமாக்கிய நிலையில் கடைசியில் சபை காவலர்கள் ட்விஸ்ட் வைத்தனர்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வாகை சூடி ஆட்சியை பிடித்தது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பொறுப்பேற்று செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் நடந்த நிலையில் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறையை தன்வசம் வைத்திருக்கும் சித்தராமையா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுவரை அவர் 13 பட்ஜெட் தாக்கல் செய்திருந்த நிலையில் இது 14வது பட்ஜெட்டாக அமைந்தது.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு நலத்திட்டங்களை சித்தராமையா அறிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்த 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஆகும் செலவு , அதனால் பயன்பெறுவோரின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை சித்தராமையா தெளிவுப்படுத்தினார். இந்நிலையில் தான் நேற்றைய பட்ஜெட் தாக்கலின்போது கர்நாடகா சட்டசபையில் ஒரு சுவாரசியமான அதேநேரத்தில் கர்நாடகா சட்டசபையில் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அதாவது நானும் எம்எல்ஏ தான் என முதியவர் ஒருவர் சட்டசபைக்குள் நுழைந்து எம்எல்ஏ இருக்கையில் அமர்ந்ததோடு மட்டுமின்றி கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமாரிடம் கைக்கொடுத்து வாழ்த்து தெரிவித்து மாஸ் காட்டிய நிலையில் அவரை போலீசார் தட்டித்தூக்கியுள்ளனர். இது எப்படி நடந்தது? என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
கர்நாடகா சட்டசபையில் நேற்று முதல்வர் சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்தார். இதற்காக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வந்து அமர்ந்தனர். அப்போது தேவதுர்கா தொகுதியின் ஜேடிஎஸ் எம்எல்ஏ கரியம்மாவின் இருக்கையில் ஆண் ஒருவர் அமர்ந்திருந்தார். இதை அருகே இருந்த குர்மித்கல் தொகுதியின் ஜேடிஎஸ் எம்எல்ஏ சரண கவுடா கண்டாகூர் பார்த்து சந்தேகம் அடைந்தார்.
இதையடுத்து அவர் அருகே இருந்த உன்சூர் எம்எல்ஏ ஹரிஷ் கவுடாவிடம், ‛‛இந்த நபர் யார்? நான் சட்டசபையில் இதற்கு முன்பு பார்த்ததே இல்லையே? உங்களுக்கு தெரிகிறதா?'' என கேள்வி எழுப்பினார். அவருக்கும் தனக்கு யார் என தெரியவில்லை என பதிலளித்தார். இதையடுத்து சபை காவலரிடம் சரண கவுடா எம்எல்ஏ புகாரளித்தார். சபை காவலர்கள் வந்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர், ‛‛நானும் எம்எல்ஏ தான். மொலகால்மூரு தொகுதியின் எம்எல்ஏவே நான் தான்'' என கூறினார். ஆனால் மொலகால்மூரு எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக கோபாலகிருஷ்ணா தான் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால் அந்த நபரை பிடித்து சபை காவலர்கள் உடனடியாக விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த திப்பே ருத்ரப்பா என்பதும், அவருக்கு 72 வயது நிரம்பி இருப்பதும் தெரியவந்தது. மேலும் நீண்டகாலமாக கர்நாடகா சட்டசபைக்கு வந்து பட்ஜெட் கூட்டத்தொடரை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளதும், இதற்காக அவர் பார்வையாளர் மாடத்துக்கு வந்ததும் தெரியவந்தது. இந்த வேளையில் எம்எல்ஏக்களுடன் சேர்ந்து சட்டசபைக்குள் நுழைந்து கரியம்மாவின் இருக்கையில் அமர்ந்ததும் தெரியவந்தது.
கர்நாடகா சட்டசபையை பொறுத்தமட்டில் தற்போது 70 பேர் முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுதான் முதல் சட்டசபை கூட்டம். இதனால் பிற கட்சி எம்எல்ஏக்கள் யார்? என்பதில் குழப்பம் உள்ளது. சபை காவலர்களுக்கும் இந்த குழப்பம் இருக்கிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி தான் திப்பே ருத்ரப்பா சட்டசபைக்குள் நுழைந்திருப்பது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications