ஆதாரம் இல்லாததால், நில முறைகேடு வழக்கில் தப்பினார் சித்தராமையா! ஏமாந்தது பாஜக! கர்நாடகாவில் ட்விஸ்ட்
பெங்களூர்: ‛முடா' நில முறைகேடு வழக்கில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது மனைவி பார்வதிக்கு எதிராக ஆதாரங்கள் எதுவும் இல்லை எனக்கூறி லோக்ஆயுக்தா போலீசார் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாஜக பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். சித்தராமையா மைசூர் மாவட்டத்தை சேர்ந்தவர். சித்தராமையா முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அவருக்கு எதிராக பரபரப்பான புகார் முன்வைக்கப்பட்டது.

அதாவது மைசூர் நகர மேம்பாட்டு வாரியம் ‛முடா' (MUDA) சார்பில் சித்தராமையாவின் மனைவிக்கு பார்வதிக்கு 14 வீட்டு மனைகளை சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. சித்தராமையாவின் செல்வாக்கு மூலம் இந்த முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டது.
இந்த குற்றச்சாட்டை சித்தராமையா மறுத்தார். மேலும் சித்தராமையா மீதான புகார் மீது விசாரணை நடத்த ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உத்தரவிட்டார். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட லோக்ஆயுக்தா போலீசார் எம்பி, எம்எல்ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துணர் மல்லிகார்ஜூன சுவாமி, தேவராஜூ ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
சித்தராமையாக ஏ1, அவரது மனைவி பார்வதி ஏ2, மைத்துணர் மல்லிகார்ஜூன ஸ்வாமி ஏ3, வீட்டு மனையை மல்லிகார்ஜூன ஸ்வாமிக்கு விற்பனை செய்த தேவராஜூ ஏ4 குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். அதன்பிறகு வழக்கு விசாரணை என்பது மைசூர் லோக்ஆயுக்தா சூப்பிரண்டு டிஜே உதேஷ் தலைமையில் விசாரிக்கப்பட்டு வந்தது. அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், முடா நிர்வாகிகள் என்று மொத்தம் 100க்கும் அதிகமானவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துணர் மல்லிகார்ஜுன ஸ்வாமி உள்ளிட்டவர்களிடம் விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டன. அதன்பிறகு 3 ஆயிரம் பக்கத்துக்கு இறுதி அறிக்கை என்பது சமர்ப்பிக்கப்பட்டது. லோக்ஆயுக்தா போலீசார் பெங்களூரில் உள்ள லோக்ஆயுக்தா தலைமை அலுவலகத்தில் விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தனர்.
அந்த அறிக்கையில் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உள்பட 4 பேருக்கும் எதிராகவும் எந்த ஆதாரங்களும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வழக்கில் இருந்து சித்தராமையா உள்பட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் வழக்கில் இருந்து 4 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்யக்கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடக முதல்வராக சித்தராமையா உள்ளார். அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி வழக்கை நீர்த்துப்போக செய்யலாம் என்று கூறி அந்த வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம் சிபிஐ வசம் ஒப்படைக்க மறுத்து உத்தரவிட்டது. இதையடுத்து லோக்ஆயுக்தா போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உள்பட வழக்கில் தொடர்புடைய 4 பேருக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என்று கூறி Clean Chit வழங்கி உள்ளது.
மேலும் இந்த வழக்கு பாஜகவுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஏனென்றால் சித்தராமையாவுக்கு எதிராக இந்த புகார் கிளம்பியதும் பாஜக அதனை கையில் எடுத்து பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுத்தது. சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பெங்களூரில் இருந்து மைசூருவுக்கு பாஜக, ஜேடிஎஸ் தலைவர்கள் 10 நாள் நடைப்பயணம் மேற்கொண்டனர். ஆனால் இப்போது சித்தராமையா உள்பட வழக்கில் தொடர்புடையவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதால் பாஜக ஏமாற்றமடைந்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications