பெங்களூர் குண்டுவெடிப்பு.. மாஸ்க் இல்லாமல் சுற்றிய குற்றவாளி.. "அவரே தானா.." பரபர போட்டோ வெளியீடு
பெங்களூர்: கர்நாடக தலைநகர் ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதில் குண்டுவைத்த நபரின் புதிய போட்டோ இப்போது வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற ராமேஸ்வரம் கஃபேவில் திடீரென குண்டுவெடிப்பு நடந்தது. இந்த விபத்தில் சுமார் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மதிய நேரத்தில் நடந்த இந்த குண்டுவெடிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கை முதலில் பெங்களூர் போலீசார் விசாரித்த நிலையில், இப்போது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது. குண்டு வைத்த நபரைப் பிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவர் குண்டுவைத்தற்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்,
ராமேஸ்வரம் கஃபே: இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதாவது பெங்களூரின் ராமேஸ்வரம் கஃபேக்குள் சாம்பல் நிற டி-சர்ட் அணிந்த இளைஞன் ஒருவர் உள்ளே சென்றுவிட்டு ஒன்பதே நிமிடங்களில் வெடிகுண்டை வைத்துவிட்டு வருவது அதில் தெளிவாகத் தெரிகிறது. தன்னை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக அவர் தொப்பி, மாஸ்க் ஆகியவற்றை அணிந்துள்ளார்.
மொபைலில் பேசிக்கொண்டே அங்கே வரும் அந்த நபர் வெடிகுண்டை வைத்துவிட்டு வெளியேறுகிறார். பேருந்திலிருந்து இறங்கி, ஓட்டலுக்குள் வருவதும், அங்கே உணவை ஆர்டர் செய்துவிட்டு மீண்டும் கிளம்புவதும் அந்த புதிய சிசிடிவி காட்சிகளில் தெளிவாகத் தெரிந்தது. மொத்தம் 9 நிமிடங்கள் மட்டுமே அந்த கஃபேவுக்குள் அந்த நபர் இருக்கிறார்.

புதிய போட்டோ: இதற்கிடையே இந்த ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் குண்டு வைத்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர் பேருந்தில் பயணிக்கும் புதிய போட்டோ வெளியாகியுள்ளது. கிழக்கு பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் ஹோட்டலில் கடந்த மார்ச் 1ஆம் தேதி நடந்த இந்த குண்டுவெடிப்பு குறித்த விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
இதுவரை வெளியான குண்டுவெடிப்பு தொடர்பான போட்டோக்கள் அனைத்திலும் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபர் தொப்பி மற்றும் மாஸ்க் உடன் தான் இருந்துள்ளது. இந்த முறை தான் முதல்முறையாகச் சந்தேக நபர் போட்டோ தொப்பியோ மாஸ்க் இல்லாமல் வெளியாகி இருக்கிறது. அந்த நபர் சாலையில் ஏதோ மொபைலை கையில் வைத்துக் கொண்டு செல்வது போல அந்த போட்டோ இருக்கிறது. அதேபோல மற்றொரு போட்டோவில் பேருந்தில் அமர்ந்து கொண்டு செல்வது போன்ற படம் இருக்கிறது.
அவரே தானா: முன்னதாக தேசிய புலனாய்வு முகமை குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் தொப்பி, முகமூடி மற்றும் கண்ணாடி அணிந்து ஓட்டலுக்குள் நுழையும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தது. அந்த போட்டோவில் இருக்கும் நபரும் இந்த நபரும் ஒரே போல தான் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, அந்த நபர் குறித்து தகவல் தெரிந்தால் அதை தங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறி தேசிய புலனாய்வு முகமை மொபைல் மற்றும் மின்னஞ்சல்களை நிறுவனம் பகிர்ந்து கொண்டுள்ளது. அப்படிப் பகிர்ந்து கொள்ளும் நபர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தேசிய புலனாய்வு அமைப்பு உறுதி அளித்துள்ளது.
ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை இந்த வாரத் தொடக்கத்தில் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐஇடி மூலம் இந்த வெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. குண்டுவெடிப்பு நடந்த உடனேயே, கர்நாடக போலீசார் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications