கர்நாடகாவில் தொடரும் கொலைகள்! இளைஞர் கொடூரமாக ஓடஓட வெட்டி படுகொலை.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்
பெங்களூர்: கர்நாடகாவின் மங்களூரில் இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக அசம்பாவித சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. இதனால் அங்குப் பதற்றமான ஒரு சூழலே காணப்படுகிறது.
கடந்த 26ஆம் தேதி கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பாஜக இளைஞர் அணித் தலைவர் பிரவீன் நெட்டாரு படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு மாபெரும் போராட்டங்கள் நடைபெற்றன.

படுகொலை
இது தொடர்பாக இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து இருந்தனர். இருந்த போதிலும், பாஜக தொண்டர்கள் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று இரவு மாஸ்க் அணிந்த மர்மநபர்கள் சிலர் இளைஞர் ஒருவரைக் கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கொடூர சம்பவம் அங்கிருந்த கடை ஒன்றின் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
|
வீடியோ
பாஜக இளைஞரணித் தலைவர் பிரவீன் நெட்டாரு கொல்லப்பட்டதால் மாவட்டத்தில் அசாதாரணமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தப் படுகொலை சம்பவம் பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தி உள்ளது இந்தச் சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் 23 வயதான ஃபாசில் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவர் தனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் உடன் கடைக்கு வெளியே நின்று பேசிக் கொண்டு இருக்கிறார். அப்போது காரில் வரும் மர்ம நபர்கள் அவரை வெட்டிச் சாய்க்கின்றனர்.

கறுப்பு மாஸ்க்
இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் கருப்பு நிற மாஸ்க் அணிந்துள்ள மர்ம நபர்கள் ஒரு துணிக்கடைக்கு வெளியே அந்த நபரைத் தாக்குவது பதிவாகி உள்ளது. முதலில் தடிகளைக் கொண்டு தாக்கும் அவர்கள், பின்னர் கத்தியைக் கொண்டும் வெட்டி சாய்க்கின்றனர். ஃபாசில் சரிந்த பின்னரும் கூட, அவரை விடாமல் கொடூரமாகத் தாக்குவதும் அதில் பதிவாகி உள்ளது. இந்தத் தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை என்றும் சம்மந்தப்பட்டவர்களைத் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

144 தடை உத்தரவு
இந்தப் படுகொலை சம்பவத்தால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளன நிலையில், சூரத்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மங்களூர் போலீஸ் தலைவர் சசி குமார் கூறுகையில், "நிலைமை இங்குப் பதற்றமாக உள்ளது. இதனால் 144 தடை உத்தரவை அமல்படுத்தி உள்ளோம். குற்றவாளிகளைத் தேடி வருகிறோம். விரைந்து கைது செய்வோம்" என்றார்.

போலீசார்
அப்பகுதியில் அசாதாரணமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டு உள்ளது. கர்நாடகா-கேரள எல்லை உட்பட 19 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்குச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இரவு 10 மணிக்குப் பின் வெளியே யாரும் நடமாடக் கூடாது என்றும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடக உள் துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, மாநிலத்தில் சட்ட ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதாகவும் சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்












Click it and Unblock the Notifications