தேர்தல் தேதியே அறிவிக்கல.. அதற்குள் வேட்பாளர்கள் அறிவிப்பு.. கர்நாடகாவில் வேகம் காட்டும் ஓவைசி
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் நிலையில், அங்கு பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தற்போதே அதற்காக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மேலும் முதல்கட்டமாக அங்கு ஒவைசி வேட்பாளர்களையும் அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் தற்போது பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பாஜகவின் பசவராஜ் பொம்மை பதவி வகித்து வருகிறார்.
கடந்த 2018-ம் ஆண்டில் அங்கு சட்டசபை தேர்தல் நடந்தது. தற்போது கர்நாடக சட்டசபையின் காலம் முடிவுக்கு வர உள்ளது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தல்
கர்நாடகாவில் இந்த முறை நான்கு முனை போட்டி நிலவலாம் என தெரிகிறது. ஆளும் பாஜக ஆட்சியை இழந்து விட கூடாது என்ற எண்ணத்தில் தீவிரமாக தேர்தல் பணியை தொடங்கியுள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சியும் இழந்த ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்பதில் கவனமாக உள்ளது. பல்வேறு வாக்குறுதிகளையும் தற்போதே அறிவித்து தேர்தல் வேலையில் மும்முரம் காட்டி வருகிறது.

4 முனை போட்டியா?
பாஜகவை பொறுத்தவரை பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரும் அடிக்கடி கர்நாடக மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் கர்நாடகாவின் மற்றொரு முக்கிய கட்சியான ஜேடிஎஸ் எனும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் தேர்தல் பணியை துவங்கியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் களம் இறங்க திட்டமிட்டுள்ளது. இதனால், அங்கு நான்கு முனை போட்டி நிலவலாம் என்று கூறப்படுகிறது. இதனால், கர்நாடகாவில் இப்போதே தேர்தல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

வேட்பாளர்களை அறிவித்த ஓவைசி
இந்த நிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஏற்கனவே போட்டியிடுவதாக அறிவித்துள்ள ஓவைசியும் தற்போதே வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு கர்நாடக அரசியலில் கவனம் பெற்றுள்ளார். முதல் கட்டமாக மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை எஐஎம்.ஐ.எம் கட்சியின் தலைவர் ஓவைசி வெளியிட்டுள்ளார். அதன்படி, பெலகாவி - நர்த் 11 தொகுதியில் லதீப் கான் பதான், ஹூப்ளி தத்வாத் கிழக்கு 72 தொகுதியில் துர்கப்பா பிஜ்வாத், பஸ்வனா பகேவாடி தொகுதியில் அல்லபாகாஷ் பிஜாபூர் ஆகியோரும் ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் போட்டியிடுவார்கள் என்று ஓவைசி தெரிவித்துள்ளார்.

கர்நாடகா, ராஜஸ்தானில் ஒவைசி கட்சி போட்டி
ஏற்கனவே சிறுபான்மை வாக்குகளை பிரித்து பாஜகவின் வெற்றிக்கு மறைமுகாக உதவுவதாக ஓவைசி மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. ஆனாலும் இதையெல்லாம் கண்டு கொள்ளாத ஓவைசி பஞ்சாப், குஜராத் போன்ற மாநில சட்டமன்ற தேர்தல்களில் சில தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்தினார். இந்த நிலையில், கர்நாடகா, ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலிலும் தனது கட்சி போட்டியிடும் என்று ஓவைசி அண்மையில் கட்சியின் நிறுவன தினத்தில் பேசியிருந்தார். இந்த நிலையில்தான் அங்கு முதல் கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications