பெங்களூர் சிறையில் பிரபல நடிகரின் காதலி பவித்ரா.. இனி தினமும் வீட்டு சாப்பாடு.. அதிரடி உத்தரவு
பெங்களூர்: சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்பவரது வழக்கில் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது தோழி பவித்ரா கவுடா உள்பட சம்பந்தப்பட்டவர்கள் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது வழக்கு விசாரணை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்நிலையில் நடிகை பவித்ரா கவுடா உள்பட 3 பேர் தினமும் ஒரு வேளை வீட்டு சாப்பிட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம், பெங்களூரு அருகே உள்ள ஒரு கால்வாயில் ரேணுகாசாமி (33) என்பவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், பிரபல கன்னட நடிகரான தர்ஷன் மற்றும் அவரது தோழி பவித்ரா கௌடா ஆகியோரின் தூண்டுதலின் பேரில் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

பவித்ரா கௌடாவிற்கும் தரிசனுக்கும் இடையே உள்ள உறவு குறித்து, ரேணுகாசாமி சமூக வலைதளங்களில் ஆபாசமான மற்றும் அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டு வந்தாராம். இதனால் ஆத்திரமடைந்த தர்ஷன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், சித்ரதுர்காவிலிருந்து ரேணுகாசாமியைக் கடத்தி வந்து, பெங்களூருவில் உள்ள ஒரு பட்டறையில் வைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் ரேணுகாசாமி உயிரிழந்தார்.
இந்த வழக்கின் விசாரணை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் ரேணுகாசாமியின் தாயார் ரத்னபிரபா அளித்த வாக்குமூலம் முரணாக இருக்கிறது. பிறழ் சாட்சியாக மாறிவிட்டதாக கூறப்படுகிறது. அதை கோர்ட்டு ஏற்றுக் கொள்ளுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அடுத்த மாதம்(ஜனவரி) 5ந் தேதி அதுபற்றி முடிவு செய்யப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் சிறையில் உள்ள பவித்ரா கவுடா மற்றும் நாகராஜூ, லட்சுமணன் ஆகியோர் தாங்கள் வீட்டு உணவை சாப்பிட அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி அவர்களது கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் தினமும் இரவு ஒரு வேளை மட்டும் வீட்டில் சமைத்த உணவை வழங்க அனுமதித்துள்ளனர்.
நடிகர் தர்ஷனும் ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதற்கிடையே பெங்களூர் சிறையில் கைதிகள் மதுகுடித்துவிட்டு நடனமாடி கும்மாளமிடுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியதால் கடந்த டிசம்பரில் சிறையில் முறைகேடுகளை தடுக்க அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதில், தர்ஷனுக்கு வழங்கப்பட்ட சில சலுகைகளும் அப்போது பறிக்கப்பட்டது. தர்ஷன் பாரக் கட்டிடத்தில் இருந்தே உணவு சாப்பிட்டு வந்தார். மேலும், நடைபயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். தற்போது அந்த சலுகைகள் பறிக்கப்பட்டிருக்கிறது. தர்ஷனுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அவர் சிறையில் தான் இருந்து வருகிறார்.












Click it and Unblock the Notifications