கடலை மிட்டாய் எப்படி தயாரிக்கப்படுகிறது? கர்நாடகா பள்ளிகளில் தடை விதிக்கப்பட்டது ஏன்? பின்னணி
பெங்களூர்: கர்நாடகா அரசு சார்பில் மதிய உணவுடன் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கடலை மிட்டாய் வழங்குவதை தடை செய்து அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு கடலை மிட்டாயில் இருக்கும் அதிக அளவிலான இனிப்பு மற்றும் கொழுப்புகள் தான் காரணம் என்று கூறப்படும் நிலையில் அந்த கடலை மிட்டாய் எங்கு தயாரிக்கப்படுகிறது? எப்படி தயாரிக்கப்படுகிறது? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
தமிழகத்தை போல் கர்நாடகாவிலும் பள்ளிகளில் மதிய உணவு திட்டம் நடைமுறையில் உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. மாணவ-மாணவிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த மதிய உணவு திட்டத்தின் கீழ் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பல மாணவ-மாணவிகள் முட்டை சாப்பிடாமல் தவிர்த்தனர். இதனால் முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் வழங்கப்பட்டது. அதன்பிறகு தான் கடலை மிட்டாய் அறிமுகம் செய்யப்பட்டது. முட்டை, வாழைப்பழம் விரும்பாத மாணவ-மாணவிகளுக்கு கடலை மிட்டாய் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தான் கடலை மிட்டாய் பள்ளி மாணவ-மாணவிகளின் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற புகாரில் தற்போது அதன் வினியோகம் என்பது கர்நாடகாவில் தடை செய்யப்பட்டுள்ளது. கடலை மிட்டாயில் அதிகப்படியான இனிப்பு மற்றும் Unsaturated கொழுப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கர்நாடகா அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மதிய உணவில் கடலை மிட்டாய் வினியோகம் செய்வதை நிறுத்தி உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவை பொறுத்தவரை மொத்தம் 55 லட்சம் பேர் மதிய உணவு திட்டத்தில் பயன்பெற்று வரும் சூழலில் 7.79 லட்சம் பேர் கடலை மிட்டாய் வழங்கப்பட்டது. இனி இவர்களுக்கு முட்டை அல்லது வாழைப்பழம் ஆகியவற்றில் ஒன்று வழங்கப்பட உள்ளது. மேலும் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கர்நாடகா பள்ளிகளுக்கு கடலை மிட்டாய்களை அஜிம் பிரேம்ஜி பவுண்டேஷன் என்ற நிறுவனம் தான் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்திடம் ரூ.1,500 கோடிக்கு ஒப்பந்தம் என்பது மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
கடலை மிட்டாய் தயாரிப்பது என்பது மிகவும் எளிமையானது. நிலக்கடலையை முதலில் வறுத்தெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வறுத்த நிலக்கடலையை எடுத்து கொள்ள வேண்டும். அதன்பிறகு ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை தண்ணீரில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். வெல்லம் நன்கு பாகு போல் மாறும் வகை அடுப்பில் இருக்க வேண்டும். தண்ணீரில் போட்டால் வெல்ல பாகு கரையாமல் இருக்கும்படி எடுத்து கொள்ள வேண்டும்.
அதன்பிறகு அடுப்பில் இருக்கும் வெல்லப்பாகுடன் ஏலக்காய் தூள், நெய் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். அதன்பிறகு வறுத்த நிலகடலையை எடுத்து சேர்த்து கிண்ட வேண்டும். நிலக்கடலையில் வெல்லப்பாகு படிந்தபிறகு இறக்கி ட்ரேயில் வைத்தால் போதும் கடலை மிட்டாய் ரெடி. ஆனால் வெல்லப்பாகு சேர்ப்பதால் இதில் இனிப்பு சுவை என்பது அதிகமாக இருக்கும். இதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை தவிர்க்கலாம். மாறாக குழந்தைகள் சாப்பிடலாம். இருப்பினும் அதிகப்படியான இனிப்புடன் கூடிய வெல்லப்பாகில் கடலை மிட்டாய் தயாரிப்பது என்பது உடலுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications