கர்நாடக அரசியல் குழப்பத்தின் பின்னணியில் பாஜக.. ஏர்போர்ட்டில் சிக்கிய 'அந்த' போட்டோ!
பெங்களூர்: கர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ் வாபஸ் பெற்ற பிறகு, அவரை சிறப்பு விமானத்தில் மும்பைக்கு அனுப்பி வைத்தது பாஜக மூத்த தலைவர் எடியூரப்பாவுக்கு, நெருக்கமான ஒருவர் என்று புகைப்பட ஆதாரத்துடன் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோலார் மாவட்டம் முல்பாகல் தொகுதியைச் சேர்ந்தவர் சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ். கடந்த மாதம் அமைச்சரவை விஸ்தரிப்பின்போது, அவருக்கு அமைச்சர் பதவி வழங்கி கவுரவித்தார் குமாரசாமி.
ஆனால் இன்று திடீரென தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆட்சிக்கு, அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் கடிதம் அளித்துள்ளார் நாகேஷ்.
சிறப்பு விமானம்
ஏற்கனவே, காங்கிரஸ்-மஜதவை சேர்ந்த மொத்தம், 13 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், சுயேச்சை எம்எல்ஏவும் கைவிட்டு விட்டாரே என்ற அதிர்ச்சியில் உள்ளார் குமாரசாமி. ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்த கையோடு, பெங்களூர், ஹெச்ஏஎல் பகுதியில் உள்ள விமான நிலையத்துக்கு சென்றார் நாகேஷ். அங்கிருந்து சிறப்பு விமானத்தில் மும்பை கிளம்பி சென்றுள்ளார்.
பாஜக பின்னணி
ஒரே ஒரு எம்எல்ஏவுக்கு சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்தது யார் என்று கர்நாடக ஊடகங்கள் விசாரித்தபோது கிடைத்த தகவல் அதிர்ச்சியானது. இதன் பின்னணியில் இருப்பது பாஜக என்று தெரியவந்துள்ளது.
எடியூரப்பா வலதுகரம்
விமான நிலையத்தில் இருந்து சந்தோஷ் விமானத்தில் ஏறும் காட்சிகள் ஊடகங்களுக்கு கிடைத்துள்ளன. அதில் எடியூரப்பாவுக்கு மிகவும் நெருக்கமானவரான சந்தோஷ் என்பவரும் நாகேஷுடன் இருப்பது தெரியவந்துள்ளது.
புகைப்படம்
கூட்டணி ஆட்சியின் மீதான அதிருப்தி காரணமாகத்தான் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததாக பாஜக தலைவர் எடியூரப்பா கூறி வந்தார். ஆனால் சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ், ஆட்சிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்த சில நிமிடங்களில், அவரை சிறப்பு விமானத்தில் அனுப்பி வைத்தது எடியூரப்பாவின் வலது கரம் என்பது புகைப்பட ஆதாரங்கள் மூலம் அம்பலமாகி உள்ளது. எனவே கர்நாடகாவில் நடக்கும் அரசியல் குழப்பங்கள் பின்னணியில் இருப்பது பாஜக என்பது உறுதிப்பட்டுள்ளது.