Prajwal Revanna: 48 வயது பெண்ணை பலாத்காரம் செய்த தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா! என்ன தண்டனை தரப்போகிறது நீதிமன்றம்?
பெங்களூர்: பண்ணை வீட்டில் வைத்து பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் அவருக்கான தண்டனை என்ன? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடக மாநிலத்தின் ஹாசன் தொகுதியின் முன்னாள் எம்பியாவார். இவர் மீது கடந்த 2021ம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. குறிப்பாக 48 வயது மதிக்கத்தக்க பணிப்பெண்ணை பிரஜ்வல் தனது பண்ணை வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் கடந்த 2024ம ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி சிஐடி போலீசார் விசாரணையை தொடங்கினர். அதற்கு முன்னர் வரை சட்டம் ஒழுங்கு காவல்துறை வழக்கை விசாரித்து வந்தது. இப்படியாக ஏறத்தாழ 14 மாதங்கள் விசாரணை நடைபெற்று வந்தது. நீதிமன்றத்தில் மொத்தம் 113 சாட்சியங்கள் வாக்குமூலம் அளித்துள்ளன.அதேபோல தடயவியல் சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சாட்சிகள் சான்றுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 1,652 பக்க குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை கடந்த 18ம் தேதி முடிவடைந்த நிலையில் தீர்ப்பு, ஜூலை 30ம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. தீர்ப்பில் பிரஜ்வல் குற்றவாளி என நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் அவருக்கான தண்டனை என்ன என்பது குறித்த நாளை அறிவிக்கப்படும்.
இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2008
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 376(2)(k) மற்றும் 376(2)(n)
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 354(A), 354(B), 354(C)
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு- 506
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு - 201
ஆகிய சட்டப்பிரிவின் கீழ் பிரஜ்வல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான தண்டனை நாளை அறிவிக்கபடும் என்றாலும், என்ன தண்டனை கிடைக்கும்? என்பத குறித்து சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
அதாவது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 376(2)(k) மற்றும் 376(2)(n) ஆகியவற்றிற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இது ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படலாம். மற்ற பிரிவுகளான 354(A), 354(B), 354(C) ஆகியவை மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகுக்கும்.
பிரிவு 506-க்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், பிரிவு 201-க்கு ஒரு வருடம் முதல் ஏழு ஆண்டுகள் வரையிலும் தண்டனை விதிக்கப்படலாம். தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2008-ன் பிரிவு 66(E) மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications