நிறுத்துங்க நிறுத்துங்க.. போதும்.. ராகுல் யாத்திரையில் பதறியடித்து ஓடி வந்த வேணுகோபால் - என்னாச்சு?
பெங்களூர் : கர்நாடக மாநிலத்தில் தற்போது பாத யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா கையைப் பிடித்துக்கொண்டு வேகமாக ஓடத் தொடங்கினார்.
ராகுலுக்கு ஈடு கொடுத்து சித்தராமையாவும் உற்சாகமாக சாலையில் 18 விநாடிகள் ஓடினார். மொத்த காங்கிரஸாரும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் கூட ராகுலோடு சேர்ந்து ஓடினர்.
வேகமாக ஓடிக்கொண்டிருந்தபோது, பின்னால் ஓடி வந்த கேசி வேணுகோபால், சித்தராமையாவை மெதுவாக நடந்து செல்லுங்கள் எனக் கூறினார். அதைத் தொடர்ந்து, நடைபயணம் மெதுவாகச் செல்லத் தொடங்கியது.
ராகுல் காந்தியின் இந்த நடைபயணத்தில் நாள்தோறும் உற்சாகத்திற்கு குறைவின்றி இருந்து வருவது அக்கட்சியின் தொண்டர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மாஸ்க்குடன் உற்சாகமாக ஓடிவந்த பெண்! மாஸாக உதவிய ராகுல் காந்தி! பாரத் ஜோடோ யாத்திரை என்னாச்சி?
ராகுல் நடைபயணம்
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கடந்த மாதம் 7ஆம் தேதி தனது 3500 கி.மீ, 150 நாள் பாத யாத்திரையைத் தொடங்கினார். கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கி, தமிழ்நாடு, கேரளாவைத் தொடர்ந்து தற்போது கர்நாடகாவில் பாத யாத்திரையை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. கர்நாடகாவில் 8வது நாளாக இன்று பாதயாத்திரை நடைபெற்று வருகிறது.
சோனியாவும் பங்கேற்பு
தசரா திருவிழா காரணமாக 2 நாட்கள் பாத யாத்திரைக்கு ஓய்வளித்த ராகுல் காந்தி, நேற்று மாண்டியாவில் உள்ள பாண்டவ புராவில் பாத யாத்திரையை மீண்டும் தொடங்கினார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரும், அவரது தாயாருமான சோனியா காந்தி, முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் பாத யாத்திரையில் பங்கேற்றனர். கடந்த 2016ஆம் ஆண்டு வாரணாசியில் நடந்த பாத யாத்திரைக்கு பிறகு சோனியா காந்தி இந்த யாத்திரையில் பங்கேற்றதால் காங்கிரஸ் காட்சியினர் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.
போதும்மா.. கார்ல வாங்க
குறிப்பாக, கொரோனா பாதிப்புக்கு பிறகு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்த சோனியா காந்தி நீண்ட காலத்துக்கு பின் இதில் பங்கேற்றார். காங்கிரஸ் தொண்டர்கள் சோனியா, ராகுலை வாழ்த்தி வழிநெடுக முழக்கம் எழுப்பினர். சோனியா காந்தி காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டே அரை கிலோ மீட்டர் தூரம் நடந்தார். அப்போது ராகுல் குறுக்கிட்டு, 'நீங்கள் நடந்தது போதும். காரில் வாருங்கள்' என வற்புறுத்தி அவரை காரில் ஏற்றினார். முன்னதாக, கழன்று இருந்த சோனியா காந்தியின் ஷூ லேஸை கட்டிவிட்டு, அன்பை வெளிப்படுத்தினார்.
சித்தராமையா கையை பிடித்த ராகுல்
நேற்றைய நடைபயணத்தின்போது ராகுல் காந்தி, கர்நாடக முன்னாள் முதல்வரும், கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையாவின் கையை பிடித்துக்கொண்டு அவரையும் தன்னுடன் வேகமாக ஓட வைத்தார். இருவரும் ஓடத் தொடங்கியதும் அதுவரை நடந்து சென்று கொண்டிருந்த மொத்தக் கூட்டமும் வேகமாக ஓடத் தொடங்கியது. காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் மட்டுமல்லாது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் அவர்களுடன் சேர்ந்து ஓடினர்.
75 வயது இளைஞர்
நடைபயணம், ஓட்டமாக மாறிய நிலையில், 75 வயதான சித்தராமையாவும் ராகுலுக்கு ஈடு கொடுத்து சிரித்தபடி சளைக்காமல் ஓடிக் கொண்டிருந்தார். உடனே, பின்னால் ஓடி வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கேசி வேணுகோபால் சித்தராமையாவும் வேகமாக ஓடுவதைப் பார்த்து, வேக வேகமாக முன்னால் ஓடி வந்து, சித்தராமையாவை நிறுத்தி, "மெதுவாகவே நடந்து போகலாம்.. ஓடாதீங்க" எனக் கூறினார்.
பாவம் அவரு
ராகுல் காந்தியிடம், நீங்க ஓடுவீங்க.. பாவம் அவரு ரொம்ப தூரம் ஓட முடியாது.. மெதுவாவே போகலாம்.. என சிரித்தபடி சொன்னார் கேசி வேணுகோபால். இதையடுத்து, ராகுலும் வேகத்தைக் கட்டுப்படுத்தி நடக்க ஆரம்பித்தார். இதையடுத்து, அனைவரும் வேகத்தைக் குறைத்து நடக்கத் தொடங்கினர்.
தடுத்த வேணுகோபால்
இது தொடர்பான வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. அந்த வீடியோவில் ராகுல் கையை பிடித்துக்கொண்டு சித்தராமையா சுமார் 18 விநாடிகள் வேகமாக ஓடி வருகிறார். காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் உற்சாக ஆரவாரத்தோடு ஓடுகின்றனர். காங்கிரஸ் யாத்திரையில், மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் உற்சாகமாக பங்கெடுத்துள்ளது காங்கிரஸ் தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.