பெங்களூரில் "சீரியல் கில்லர்?" டிரம்களில் கிடக்கும் பெண்களின் சடலங்கள்! காங். பரபர குற்றச்சாட்டு
கர்நாடகாவில் திங்கள்கிழமை பெண் ஒருவரின் சடலம் டிரம்மில் கண்டறியப்பட்டது.
பெங்களூர்: பெங்களூரில் 4 மாதங்களில் 3ஆவது முறையாகப் பெண்ணின் சடலம் டிரம்மில் கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள காங்கிரஸ் ஆளும் பாஜக அரசை சாடியுள்ளது.
நமது அண்டை மாநிலமான கர்நாடக தலைநகர் பெங்களூரில் கடந்த திங்கள்கிழமை பெண் ஒருவரின் சடலம் டிரம்மில் மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் கர்நாடக முழுவதும் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
கடந்த 4 மாதங்களில் 3ஆவது முறையாக இதுபோல பெண்ணின் சடலம் டிரம்மில் மீட்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள காங்கிரஸ் ஆளும் பாஜகவைக் கடுமையாகச் சாடியுள்ளது.

சடலம்
கர்நாடக தலைநகர் பெங்களூரு பையப்பனஹள்ளி ரயில்வே ஸ்டேஷனில் திங்கள்கிழமை பிளாஸ்டிக் டிரம்மில் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, ஆட்டோவில் வந்த மூவர் அந்த டிரம்மை வைத்துவிட்டுச் சென்றது தெரிய வந்ததது அதன் அடிப்படையில் போலீசார் தங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், இதைக் காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது.

போலீசார்
பாஜக அரசை சாடும் காங்கிரஸ், பெங்களூரில் சீரியல் கில்லர் நடமாடி வருவதாக விமர்சித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் மட்டும் மூன்று பெண்கள் இதுபோல டிரம்மில் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திங்கள்கிழமை கண்டறியப்பட்ட டிரம்பில் பெண்ணின் சடலத்துடன் உடைகளும் அதில் திணிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் குற்றவாளியைக் கண்டறிந்துவிட்டதாக போலீசார் கூறுகின்றனர். தமன்னா என்ற 27 வயதான பெண், அவரது மைத்துனரால் கொல்லப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

3ஆவது சடலம்
பீகாரில் வசித்து வந்த தமன்னா, தனது கணவர் அஃப்ரோஸை விட்டுவிட்டு உறவினர் இன்டெக்வாப் என்பவருடன் பெங்களூருக்கு வந்துவிட்டார். இருவரும் பெங்களூரில் கணவர் மனைவி போல வாழ்ந்து வந்தனர். இந்தச் சூழலில் தான் தமன்னாவின் கணவர் அஃப்ரோஸின் சகோதரர் கமல் தனது நண்பர்களின் உதவியுடன் பிப்ரவரி 12ஆம் தேதி அந்த பெண்ணை கொடூரமாகக் கொலை செய்துள்ளார். ஆட்டோவில் வந்து டிரம்மை விட்டுச் சென்றதும் அவர்கள் தான் என்று பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் 3 பேரைக் கைது செய்துள்ளதாகவும் 5 பேரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெண்களின் சடலம்
கடந்த சில மாதங்களில் பெங்களூரில் மூன்றாவது முறையாக இதுபோல டிரம்பில் சடலம் கண்டறியப்பட்டுள்ளது. முதலில் கடந்தாண்டு டிசம்பர் 6ஆம் தேதி ரயில் ஒன்றில் இருந்த டிரம்மில் சிதைந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 4இல் பெங்களூரு யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடையில் மற்றொரு உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த பெண்ணின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் காணப்பட்டது. இருப்பினும், இந்த இரு பெண்களும் யார் என்பதை போலீசார் கடைசி வரை அடையாளம் காண முடியவில்லை.

சீரியல் கில்லர்
இந்தச் சூழலில் தான் இந்த விவகாரத்தைக் காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. அங்கு சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த விவகாரத்தில் பாஜகவை சாடியுள்ளது. காங்கிரஸின் ரந்தீப் சுர்ஜேவாலா தனது ட்விட்டரில், "பெங்களூருவாசிகளுக்கு இந்த தேதிகளை மறக்கவே முடியாது..ரயில்வே ஸ்டேஷன்களில் டிரம்ஸ்/பேரலில் அடைக்கப்பட்ட 3 பெண்களின் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு தோல்வியடைந்தது. சீரியல் கில்லிங் நடைபெறுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

மறுப்பு
மறுப்பு இருப்பினும், சீரியல் கில்லர் என்பதைப் பெங்களூர் போலீசார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இதற்கு முன்பு நடந்த "டிரம்" கொலைகளுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். பெங்களூர் போலீசார் கூறுகையில், "முந்தைய சம்பவங்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. அதேபோல இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் சீரியல் கில்லர் இருப்பதான எந்தவொரு ஆதாரத்தையும் நாங்கள் கண்டுபிடிக்கவில்லை" என்றும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications