தேதி ரெடி.. முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவக்குமார்.. பதவியேற்பு எப்போது தெரியுமா?
பெங்களூர்: நீண்ட இழுபறிக்கு பிறகு கர்நாடகா முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள் 2 பேரும் எப்போது பதவியேற்க உள்ளனர். பதவியேற்பு விழா எங்கு நடைபெற உள்ளது என்பது தொடர்பான முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனித்து ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் தொடர்ந்து பல தேர்தல்களில் சறுக்கலை சந்தித்து வந்தது. கடந்த ஆண்டு கூட பஞ்சாப்பில் நடந்த தேர்தலில் ஆம்ஆத்மியிடம் ஆட்சியை பிடித்தது.

இருப்பினும் கடந்த ஆண்டு இறுதியில் பாஜகவிடம் இருந்து இமாச்சல பிரதேசத்தை காங்கிரஸ் கைப்பற்றியது. இது அந்த கட்சிக்கு பூஸ்ட்டாக அமைந்தது. இருப்பினும் அது சிறிய மாநிலமாகும். இந்நிலையில் தான் கர்நாடகா தேர்தலில் வென்று செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டது.
இதனை காங்கிரஸ் மேலிடம் நன்கு உணர்ந்திருந்து சரியான வியூகங்களுடன் பிரசாரத்தை மேற்கொண்டது. மேலும் கர்நாடகா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் அது அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தென்மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு கைக்கொடுக்கும் என நினைத்தது. இதனை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தீவிர களப்பணியாற்றியதன் விளைவாக தான் கர்நாடகாவில் 135 இடங்கள் கிடைத்துள்ளன.
இந்த தேர்தலில் பாஜக 66, ஜேடிஎஸ் 19 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதையடுத்து தான் முதல்வர் பதவிக்கான ரேஸ் தொடங்கியது. சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. டெல்லியில் நேற்று முன்தினம், நேற்று என 2 நாட்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் பேச்சவார்த்தை நடத்தினர். அப்போது இருவரும் முதல்வர் பதவியை விட்டு கொடுக்காமல் பிடிவாதம் பிடித்தனர்.

இறுதியாக கட்சி மேலிடம், எம்எல்ஏ ஆதரவு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சித்தராமையா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதனை டிகே சிவக்குமார் ஏற்கவில்லை. மேலும் அவருக்கு வழங்கப்படும் துணை முதல்வர் பதவியையும் அவர் விரும்பவில்லை. இதனால் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டது. காங்கிரஸ் தலைவர்கள் டிகே சிவக்குமாரை சமாதானம் செய்ய தொடங்கினர். நேற்று இரவில் சோனியா காந்தி, டிகே சிவக்குமாரை போனில் தொடர்பு கொண்டு பேசி சமாதானம் செய்தார். இதைடுத்து துணை முதல்வர் பதவியை ஏற்பதாக டிகே சிவக்கமார் ஒப்புக்கொண்டார்.
இதன்மூலம் ரிசல்ட் வெளியாகி இன்றுடன் 5 நாள் ஆகும் நிலையில் அடுத்த முதல்வர் யார்? என்பதற்கு விடை கிடைத்துள்ளது. கர்நாடகா முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2013 முதல் 2018 வரை ஏற்கனவே சித்தராமையா முதல்ரவாக இருந்த நிலையில் தற்போது அவர் 2 முறையாக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் 2 பேரும் நாளை மறுநாள் (மே 20) பெங்களூரில் பதவியேற்க உள்ளனர். பதவியேற்பு விழா பெங்களூர் கன்டீரவா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தொடங்கி உள்ளன. இந்த பதவியறே்பு விழாவை பெரிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் உள்ள பிற எதிர்க்கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications