அப்போ 5 ஆண்டும் சித்தராமையா தான் முதல்வரா.. சிவக்குமார் கோரிக்கைக்கு மேலிடம் மவுனம்? கவனிச்சீங்களா
பெங்களூர்: கர்நாடகா முதல்வராக சித்தராமையாவையும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரையும் காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்துள்ளது. இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டு பதவிக்காலம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தான் மேலிட தலைவர்களின் நடவடிக்கையை கவனித்தால் அப்படி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்தது. ஓட்டு எண்ணிக்கை 13ம் தேதி நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வென்று அசத்தியது. பாஜக 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஜேடிஎஸ் 19 இடங்களிலும் மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றனர்.

இதன்மூலம் காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் தனித்து ஆட்சியை அமைக்கிறது. கருத்து கணிப்புகளை தாண்டி காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியை பிடிக்கிறது. இந்நிலையில் தான் ரிசல்ட் வெளியான 5வது நாளான இன்று கர்நாடகா முதல்வர் யார்? என்பதை காங்கிரஸ் மேலிடம் உறுதி செய்தது.
முதல்வர் பதவிக்கு சித்தராமையா மற்றும் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் டெல்லியில் லாபி நடத்தினர். காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி வழங்க முடிவு செய்தது. ஆனால் டிகே சிவக்குமார் முதல்வர் பதவியை விட்டு கொடுக்க மறுத்து பிடிவாதம் பிடித்தார். மேலிட தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் நேற்று முன்தினம், நேற்று என 2 நாள் சமாதானம் படுத்தினர்.

இறுதியாக சோனியா காந்தி சமாதானத்தை தொடர்ந்து டிகே சிவக்குமார் நேற்று நள்ளிரவில் முதல்வர் பதவியை விட்டு கொடுத்தார். இதையடுத்து இன்று மதியம் அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் கர்நாடகா முதல்வர் யார்? என்பதை அறிவித்தார். சித்தராமையா முதல்வராகவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கர்நாடகாவில் 3 துணை முதல்வர்கள் நியமிக்க முதலில் முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் நேற்றைய பேட்டியின்போது கேசி வேணுகோபால் தெளிவாக ஒரு துணை முதல்வர் என குறிப்பிட்டார்.
இதற்கிடையே தான் கர்நாடகா முதல்வர் பதவி குறித்து ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது காங்கிரஸ் மேலிடம் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமாருக்கு ஆகியோருக்கு தலா இரண்டரை ஆண்டுகள் என முதல்வர் பதவியை வழங்க உள்ளது. முதல் இரண்டரை ஆண்டு சித்தராமையாவும், அதன்பிறகு இரண்டரை ஆண்டு டிகே சிவக்குமாரும் முதல்வராக இருப்பார்கள் என கூறப்படுகிறது. ஆனால் இன்றைய பேட்டியின்போது காங்கிரஸ் மேலிட தலைவர்கள் யாரும் இதுபற்றி எந்த விஷயத்தையும் குறிப்பிடவில்லை.

இந்நிலையில் தான் சில கேள்விகள் எழுந்துள்ளன. அதாவது தனக்கு தான் 5 ஆண்டு முதல்வர் பதவி வேண்டும். இரண்டரை ஆண்டு பதவி பங்கீட்டையும் அவர் விரும்பவில்லை என டிகே சிவக்குமார் உறுதியாக கட்சி மேலிடத்திடம் கூறினார். ஆனால் தற்போது சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளதன் மூலம் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் மேலிட தலைவர்கள் இரண்டரை ஆண்டு பதவி பங்கீடு பற்றி இன்று எதுவும் கூறவில்லை. இதனால் அடுத்த 5 ஆண்டுகளும் சித்தராமையா தான் முதல்வராக இருப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த கேள்வி ஒருபுறம் எழுந்தாலும் கூட காங்கிரஸ் மாற்று பிளானை வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதாவது பொதுவெளியில் இப்போதே இரண்டரை ஆண்டு முதல்வர் பங்கீடு என்று கூறினால் அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தலாம். இதனால் காங்கிரஸ் மேலிடம் அதுபற்றி தற்போது எதுவும் கூறாமல் அமைதி காத்திருக்கலாம் எனவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் அரசியலில் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் சித்தராமையா 5 ஆண்டு முதல்வர் பதவியை தொடர்வாரா? இல்லை இரண்டரை ஆண்டு கழித்து டிகே சிவக்குமார் முதல்வர் பதவியை பெறுவாரா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications