“கமல்ஹாசன் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லையா?”.. வழக்கறிஞரிடம் கேட்ட கர்நாடக ஐகோர்ட் நீதிபதி
பெங்களுர்: நடிகர் கமல்ஹாசன் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லையா? என கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி இன்று கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு பதில் அளித்த கமல்ஹாசனின் வழக்கறிஞர், கமல் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை எனத் தெரிவித்தார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைப்' படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் "தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்" என நடிகர் கமல்ஹாசன் பேசியது கன்னட அமைப்பினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கமல் ஹாசன் தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. அதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காததால், தக் லைஃப் பட வெளியீட்டைத் தடை செய்வதாக கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை (KFCC) கடந்த மே 30 ஆம் தேதி அறிவித்தது.

கர்நாடகாவில் தக் லைஃப் படத்துக்கு தடை
கேஎஃப்சிசி-யின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற தனி நீதிபதி எம். நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, "யாருக்கும் மற்றவரின் உணர்வுகளை புண்படுத்த உரிமை இல்லை. மொழி என்பது ஒரு குறிப்பிட்ட மக்களுடன் இணைக்கப்பட்ட ஒரு உணர்வு. கன்னட மக்களை புண்படுத்தும் வகையில் நீங்கள் பேசிவிட்டீர்கள். எந்த அடிப்படையில் அப்படி பேசினீர்கள்? நீங்கள் என்ன வரலாற்றாசிரியரா அல்லது மொழியியல் அறிஞரா? கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்த முடியாது.
நீதிபதி காட்டம்
நீங்கள் அவ்வாறு பேசியதால் தற்போது கலவரச் சூழல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மக்கள் மன்னிப்பு தானே கேட்டார்கள்? ஆனால் நீங்கள் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறி கர்நாடக மக்களின் உணர்வுகளை அவமதித்து உள்ளீர்கள். நீங்கள் மன்னிப்பு கேட்டால் எல்லாம் தீர்ந்திருக்கும். நீங்கள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், கர்நாடகாவில் படம் ஏன் ஓட வேண்டும் என விரும்புகிறீர்கள்?" என கடுமையாக சாடியிருந்தார் நீதிபதி.
மேலும் மன்னிப்பு கேட்பது குறித்து கமலுக்கு ஆலோசனை வழங்குமாறு அவரது வழக்கறிஞக்கு உத்தரவிட்டார் கர்நாடக ஐகோர்ட் நீதிபதி. ஆனால், கமல்ஹாசன் தரப்பில், "மனுதாரர் தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். மேலும் கர்நாடகாவில் தக் லைஃப் படம் மீதான தடைக்கும் ஒப்புக்கொண்ட அவர், கர்நாடக திரைப்பட வர்த்தக சபையுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று தெரிவித்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டது.
கமல்ஹாசன் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லையா?
இதனையடுத்து, "கமல்ஹாசன் மற்றும் கே.எஃப்.சி.சி இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் வரை கமலின் தக்லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது" என நீதிபதி நாகபிரசன்னா உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த மனு நீதிபதி நாகபிரசன்னா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கமல்ஹாசன் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லையா? உச்ச நீதிமன்ற விசாரணை என்ன ஆனது? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த கமல்ஹாசனின் வழக்கறிஞர், நடிகர் கமல்ஹாசன் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை என்றும், இந்த விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கர்நாடகாவில் 'தக் லைஃப்' படத்தை வெளியிட ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரட்டும் என உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications