ஹிஜாப் விவகாரம்: பள்ளிகளில் சீருடைதான் அணிய வேண்டும்! கர்நாடக முதல்வர் திட்டவட்டம்
பெங்களூர்: சீருடை குறித்த அரசின் உத்தரவை மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாக பியூ கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வருவதற்கு கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. பல கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை கல்லூரி நிர்வாகம்.
கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு, உடுப்பி பகுதியில் உள்ள கல்லூரிகளில் இயங்கி வரும் இந்து அமைப்பை சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, காவி துண்டு அணிந்து வந்தனர். அதேபோல், பெண்களும் காவித்துண்டு அணிந்து ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பினர்.

ஹிஜாப்
கடந்த சில நாட்களுக்கு முன்பு மங்களூரில் உள்ள கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்ததற்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி கொடுக்கவில்லை. மாணவிகள் ஹிஜாப் அணிந்துவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ அமைப்பான ஏபிவிபி இயக்கத்தினர் கல்லூரிக்கு காவித்துண்டு அணிந்து வந்தனர். அவர்கள் ஹிஜாப் அணியக்கூடாது, இல்லையென்றால் நாங்களும் இப்படித்தான் கல்லூரிக்கு வருவோம் என்றனர். இதையடுத்து இதேபோன்ற சம்பவம் சிக்மங்களூர் கல்லூரியிலும் தற்போது நடந்துள்ளது.

அனுமதி இல்லை
உடுப்பி கல்லூரியில் 6 மாணவிகள் தொடர்ந்து ஹிஜாப் அணிந்து வந்ததால், அவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படாமல் உள்ளனர். கடந்த டிசம்பர் 31ம் தேதியில் இருந்து இவர்கள் "ஆப்சென்ட்" என்று வகுப்பு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதற்றம்
இதே கட்டுப்பாடு இன்னும் சில பியூ கல்லூரிகளிலும் போடப்பட்டு வருகிறது. இதனால் கர்நாடகாவில் இருக்கும் பியூ கல்லூரிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனிடையே ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என்று, நீல வண்ண துண்டுடன் தலித் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

முதல்வர் அட்வைஸ்
இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் ஹிஜாப் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ''தனி மனித உரிமைகள், நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலேயே சீருடை குறித்த அரசின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் படி, கர்நாடக கல்விச் சட்டத்தில் உள்ளதைதான் பள்ளிகளில் பின்பற்றி வருகிறார்கள். அரசின் இந்த உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும், மாணவர்கள் இந்த விவகாரத்தை விட்டுவிட்டுப் படிப்பில் அக்கறை செலுத்த வேண்டும்'' என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். சமீபத்தில் அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில், அரசு பள்ளிகளில் அரசு கூறும் சீருடையையும், தனியார் பள்ளிகளில் நிர்வாகம் கூறும் சீருடையையும்தான் மாணவ, மாணவிகள் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications